ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாகப் பேசிய அவர், வரும் நாட்களில் ஈரானுக்கு எதிரான இந்தத் தாக்குதல்கள் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என எச்சரித்துள்ளார். இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது தனக்கு மிகுந்த வேதனையையும் வலியையும் அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இதற்குப் பின்னால் இருப்பவர்கள் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மோதலில் தற்போது அமெரிக்காவும் இஸ்ரேலுடன் நேரடியாகக் கைகோர்த்துள்ளதாக நெதன்யாகு முக்கியத் தகவலைப் பகிர்ந்துள்ளார். கடந்த 40 ஆண்டுகளாக இஸ்ரேல் எதைச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருந்ததோ, அதைச் செய்து முடிப்பதற்கான தருணம் தற்போது வந்துள்ளதாக அவர் கூறினார். பிராந்தியத்தில் நிலவும் அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தங்களுக்கு எதிரான சக்திகளை முற்றிலும் முடக்கவும் அமெரிக்காவின் ஆதரவு தங்களுக்குப் பெரும் பலமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://x.com/netanyahu/status/2028134104751804621? 

இந்த ராணுவ நடவடிக்கையின் இறுதி இலக்கு “பயங்கரவாதத்தை முழுமையாக அழிப்பதே” என்று நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் ராணுவக் கட்டமைப்புகள் மற்றும் அணுசக்தி மையங்களை இலக்கு வைத்து நடத்தப்படும் இந்தத் தாக்குதல்கள், இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை ஓயாது என அவர் சூளுரைத்துள்ளார். வல்லரசு நாடான அமெரிக்காவின் நேரடித் தலையீடு மற்றும் நெதன்யாகுவின் இந்த அதிரடிப் பேச்சு ஆகியவற்றால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version