அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு உரிய நஷ்டஈடாக ‘இரத்த பணம்’ (Blood Money) வழங்கப்பட வேண்டும் என்று ஈரானின் புதிய உச்சத்தலைவர் முஜ்தபா கமேனி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சமீபத்திய தாக்குதல்களில் ஈரான் சந்தித்த இழப்புகளுக்கு அமெரிக்கா பொறுப்பேற்று இழப்பீடு வழங்காவிட்டால், அதற்கு காரணமான குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஈரானின் இந்தத் திடீர் நிபந்தனை, தற்போது நிலவி வரும் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, உலக நாடுகளின் கவலையை அதிகரித்துள்ளது ஈரானின் ஹார்முஸ் நீரிணை குறித்த அறிவிப்புதான். உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியமான வழித்தடமான ஹார்முஸ் நீரிணையின் நிர்வாகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்போவதாக முஜ்தபா கமேனி கூறியுள்ளார். இதன் மூலம் இந்த வழித்தடத்தை ஈரான் மீண்டும் முழுமையாக மூடிவிடுமோ அல்லது சர்வதேச கப்பல்களுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதிக்குமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், ஈரானின் இந்த ‘புதிய கட்டம்’ குறித்த அறிவிப்பு உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. ஹார்முஸ் நீரிணையை ஈரான் தனது அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவது ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு இந்தப் பதற்றத்தைத் தணிக்கப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் வேளையில், ஈரானின் இந்தப் பிடிவாதமான நிலைப்பாடு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் ஒரு முழு அளவிலான போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
