எபோலா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்குச் சென்று திரும்பிய ‘கிரீன் கார்டு’ வைத்துள்ள சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு எபோலா பாதிப்பு குறித்து தங்களது எச்சரிக்கையைத் தீவிரப்படுத்தியதை அடுத்து, அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கடந்த 21 நாட்களில் காங்கோ, உகாண்டா அல்லது தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்குச் சென்ற அல்லது அந்நாடுகள் வழியாகப் பயணம் செய்த கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இந்தத் தடை பொருந்தும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட 30 நாட்கள் எபோலா பயணத் தடையில் இருந்து அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் எபோலா வைரஸ் நாட்டிற்குள் பரவுவதைத் தடுக்க இந்த நீட்டிப்பு அவசியமாகிறது என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கப் பொதுச் சுகாதாரச் சட்டத்தின் கீழ் வரும் ‘டைட்டில் 42’ (Title 42) பிரிவைப் பயன்படுத்தி இந்த உத்தரவை சிடிசி பிறப்பித்துள்ளது. தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுக்க வெளிநாட்டினர் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்ய இந்தச் சட்டம் மத்திய சுகாதாரத் துறைக்கு அதிகாரம் அளிக்கிறது.

பொதுவாக, அமெரிக்காவின் முந்தைய பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் கோவிட்-19 காலத்தின் போது பிறப்பிக்கப்பட்ட ‘டைட்டில் 42’ உத்தரவுகள் எதிலும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version