மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் புரட்சிகர காவல் படை (Revolutionary Guards) ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. “குழந்தைகளைக் கொல்லும் இந்த கிரிமினல் (நெதன்யாகு) ஒருவேளை இன்னும் உயிருடன் இருந்தால், நாங்கள் அவரைத் தொடர்ந்து வேட்டையாடுவோம்; எங்களின் முழு பலத்தையும் பயன்படுத்தி அவரை நிச்சயமாகக் கொல்வோம்” என்று ஈரான் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிட்டுள்ளது. 2026 பிப்ரவரியில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஈரானின் இந்த அறிக்கையை தொடர்ந்து சமூக ஊடகங்களில் நெதன்யாகுவின் இருப்பிடம் குறித்த கேள்விகளை எழுப்பின. குறிப்பாக, அவர் தங்கியிருந்த கட்டிடம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் அவர் உயிரிழந்ததாகவும் வதந்திகள் பரப்பப்பட்டன. ஆனால், இதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ள இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம், “நெதன்யாகு நலமுடன் இருக்கிறார்; அவர் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்புப் பணிகளை முன்னின்று நடத்தி வருகிறார். இவை அனைத்தும் ஈரானிய ஊடகங்களால் பரப்பப்படும் போலிச் செய்திகள் என்று விளக்கமளித்துள்ளது.

கடந்த மார்ச் 12 அன்று நெதன்யாகு வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் அவரது ஒரு கையில் 6 விரல்கள் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதைப் பார்த்த நெட்டிசன்கள், இது ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என்றும், உண்மையான நெதன்யாகு ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டார் என்றும் வதந்திகளைப் பரப்பினர். வதந்திகள் முற்றிய நிலையில், “அவர் உயிருடன் இருந்தால் கொல்வோம்” என ஈரான் தற்போது கூறியுள்ளது இந்தப் பதற்றத்தை இன்னும் அதிகரித்துள்ளது.

மேலும், இந்த வதந்திகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ள இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம், நெதன்யாகு பாதுகாப்பாகவும் நலமுடனும் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. வீடியோவில் தெரிந்த 6 விரல்கள் என்பது ‘கேமரா கோணம் மற்றும் ஒளியமைப்பால் ஏற்பட்ட பிம்பம்’ என்றும், அது ஏஐ அல்ல என்றும் உண்மை கண்டறியும் குழுக்கள் உறுதி செய்துள்ளன. இருப்பினும், ஈரானின் நேரடி கொலை மிரட்டலைத் தொடர்ந்து நெதன்யாகுவிற்கான பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கிய பிறகு, 76 வயதான பெஞ்சமின் நெதன்யாகு முதன்முறையாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது இஸ்ரேல் ராணுவத்தின் தற்போதைய செயல்பாடுகளை நியாயப்படுத்திப் பேசிய அவர், ஈரானின் புதிய உச்ச தலைவரான மோஜ்தபா காமேனியை (Mojtaba Khamenei) குறிவைத்து ஒரு மறைமுக எச்சரிக்கையை விடுத்தார்.

ஈரான் ஆட்சியைக் கவிழ்ப்பதே தங்கள் இலக்கு என்று குறிப்பிட்ட அவர், ஈரானின் உயர்மட்டத் தலைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதைத் தனது பேச்சின் மூலம் சூசகமாகத் தெரிவித்தார். நெதன்யாகுவின் இந்த ஆக்ரோஷமான உரைக்குப் பதிலடியாகவே, “நெதன்யாகு உயிருடன் இருந்தால் அவரைத் தேடிப்பிடித்துக் கொல்வோம்” என்று ஈரானின் புரட்சிகர காவல் படை தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதூ.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version