மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானுக்குச் சொந்தமான தீவுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பாரசீக வளைகுடாவில் “ரத்த ஆறு ஓடும்” என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தீவிரமடைந்து வரும் சூழலில், ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவு (Kharg Island) உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்ற எதிரிகள் திட்டமிடுவதாக வெளியான தகவலையடுத்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. “தாய்நாடு அல்லது மரணம்” என்ற கோஷத்துடன், ஆக்கிரமிப்பாளர்களின் ரத்தத்தால் கடல் சிவக்கும் என அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது. உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதற்கான அழுத்தங்கள் அதிகரித்து வருவதால், உலக நாடுகளுக்குச் செல்லும் எரிபொருள் விநியோகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் வளைகுடா பகுதியில் சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வதால், எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் உலகளவில் பரவியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, கச்சா எண்ணெய் இறக்குமதியில் பெரும் பகுதியை மத்திய கிழக்கு நாடுகளையே சார்ந்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள போக்குவரத்து முடக்கம் மற்றும் போர்ச் சூழலால் பெட்ரோல், டீசல் விலையேற்றம் மட்டுமின்றி, சிலிண்டர் விநியோகத்திலும் சிக்கல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. போர் விரைவில் முடிவுக்கு வராத பட்சத்தில், எரிபொருள் பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் காரணமாக இந்தியாவின் சாமானிய மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version