ஓமன் கடற்பரப்பில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட ஈரானியத் தாக்குதல்களில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளனர் மற்றும் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் மேற்கு ஆசியப் பகுதியில் பணியாற்றும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

“தாக்குதலுக்குள்ளான கப்பல்களில் ஒன்று மார்ஷல் தீவுகளின் கொடி ஏந்திய ‘MKD Vyom’ ஆகும். மஸ்கட்டில் இருந்து சுமார் 52 கடல் மைல் தொலைவில் இக்கப்பல் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியின்படி, ஒரு ட்ரோன் படகு இக்கப்பலைத் தாக்கியதில், எஞ்சின் அறையில் தீ விபத்து மற்றும் வெடிப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஒரு இந்திய மாலுமி உயிரிழந்ததை ஓமன் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.”

ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம் இந்த உயிர்ச்சேதத்தை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கான தாயகம் திரும்புவதற்கான நடைமுறைகள்  உள்ளிட்ட ஏற்பாடுகளைச் செய்ய உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தால் கப்பலின் எஞ்சின் பகுதிக்குக் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இது இப்பகுதி வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.”

ஓமனின் முசந்தம் தீபகற்பத்திற்கு அருகே நடந்த மற்றொரு தாக்குதலில், பலாவ் (Palau) நாட்டு கொடியுடன் சென்ற ‘ஸ்கைலைட்’ (Skylight) என்ற எண்ணெய் டாங்கர் வார இறுதியில் இலக்கு வைக்கப்பட்டது. இக்கப்பலில் பணியாற்றிய இரண்டு இந்தியக் குடிமக்கள் உயிரிழந்தனர். மேலும் மூன்று இந்திய ஊழியர்கள் காயமடைந்தனர். இக்கப்பலில் இருந்த மொத்தம் 21 ஊழியர்களில் 16 பேர் இந்தியர்கள் ஆவர்.

தாக்குதலின் போது இக்கப்பலில் இந்திய மற்றும் ஈரானிய மாலுமிகள் பணியாற்றி வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரசீக வளைகுடா பகுதியில், குறிப்பாக வெளிநாட்டு கொடிகளின் கீழ் இயங்கும் கப்பல்களில் பணியாற்றும் இந்திய கடல்சார் ஊழியர்கள் எதிர்கொள்ளும் அதிகரித்து வரும் அபாயங்களை இச்சம்பவம் உணர்த்துவதாக ‘தி இந்து’  செய்தி வெளியிட்டுள்ளது.

LCT Alyh’ என்ற கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மற்றொரு இந்திய மாலுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்துள்ளார். ஒட்டுமொத்தமாக, மேற்கு ஆசியா முழுவதும் ஈரான் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் சுமார் 20 இந்தியக் குடிமக்கள் காயமடைந்துள்ளனர். இதில் ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் லேசான காயங்களுடன் தப்பிவிட்டதாகவும், அவர்கள் தற்போது ஆபத்துக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. தற்போதைய மோதல் தீவிரமடைந்ததில் இருந்து இதுவரை மூன்று கப்பல்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கடல்சார் போக்குவரத்து கடுமையாகக் குறைந்துள்ளது. பிப்ரவரி இறுதியில் ஒரு நாளில் 60 முதல் 70 கப்பல்கள் கடந்த இந்த வழித்தடத்தில், மார்ச் 1 அன்று கப்பல் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version