மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் 39 ராணுவ இலக்குகளைக் குறிவைத்து அதிரடித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. லெபனானில் உள்ள தெப்னைன் (Tebnine) அரசு மருத்துவமனை அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 11 சுகாதாரப் பணியாளர்கள் காயமடைந்ததற்கும், மருத்துவக் கட்டமைப்பு சேதப்படுத்தப்பட்டதற்கும் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த ஹிஸ்புல்லா அமைப்பினர், இஸ்ரேலிய எல்லைப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் ராணுவ நிலைகள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
மறுபுறம், லெபனான் சுகாதார நிலையங்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்கள் குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டங்களின்படி மருத்துவமனைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தொடங்கப்பட்டாலும், வடக்கு இஸ்ரேல் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை லெபனானில் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதனால் போர் நிறுத்தம் குறித்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே மோதல் போக்கு மேலும் தீவிரமடைந்து வருகிறது.
