ஜப்பானின் தெற்கு கியூஷு பகுதியில் அமைந்துள்ள குமாமோட்டோ மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை இன்று 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலடிக்கு கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் ஒரு மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தையடுத்து, கியூஷு தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ, நாகசாகி, ககோஷிமா, ஃபுகுவோகா, சாகா, ஒய்டா மற்றும் மியாசாகி உள்ளிட்ட முக்கிய மாகாணங்களுக்கு அவசரகால நிலநடுக்க எச்சரிக்கைகள் மற்றும் சுனாமி எச்சரிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. டோக்கியோவிலிருந்து சுமார் 900 கி.மீ தென்மேற்கே உள்ள அரியாகே வளைகுடா பகுதி இதன் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளது. இருப்பினும், இந்தச் சுனாமி எச்சரிக்கையானது உள்ளூர் கடலோரப் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், இதனால் பேரழிவுகள் எற்பட வாய்ப்பில்லை என்றும் அமெரிக்க பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி உயிரிழப்புகளோ அல்லது பெரிய அளவிலான சேதங்களோ ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டுள்ளதோடு, மீட்புக்குழுவினர் உள்கட்டமைப்புகளை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

வரும் மணிநேரங்களில் நில அதிர்வுகள் தொடர வாய்ப்புள்ளதால், கடலோரப் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அதிகாரப்பூர்வ பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அதிகாரிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர். கடந்த 2016-ஆம் ஆண்டில் இதே குமாமோட்டோ பகுதியில் ஏற்பட்ட கோர நிலநடுக்கம் 50-க்கும் மேற்பட்டோரின் உயிரைக் குடித்தது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version