ஜோர்டான் மற்றும் எத்தியோப்பியா பயணத்தை முடித்துக் கொண்டு ஓமன் சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 15ம் அதேதி புறப்பட்டு சென்றார். முதலில், ஜோர்டான் சென்ற பிரதமர் மோடி, மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைனை சந்தித்தார். இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் வகையில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பின்னர், எத்தியோப்பியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டின் பிரதமர் அபி அகமது அலி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்றார். பொருளாதாரம், புதிய கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுகாதாரம், திறன் கட்டமைப்பு
உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்களில் இருதரப்பு ஒத்துழைப்பு பற்றி முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து எத்தியோப்பியாவின் ‘தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா’ என்ற உயரிய விருதை பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் பிரதமர் அபி அகமது வழங்கி கவுரவித்தார். பிரதமர் மோடிக்கு வெளிநாடுகளில் வழங்கப்பட்ட 28வது உயரிய விருது இதுவாகும்.
ஜோர்டான் மற்றும் எத்தியோப்பியா பயணத்தை முடித்துக் கொண்டு ஓமன் சென்ற பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓமன் மன்னரும், பிரதமருமான சுல்தான் ஹைதம் பின் தாரிக்கை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். ஓமனில் கிடைத்த அன்பான வரவேற்பிற்கு நன்றி என சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். ஓமனில் உள்ள இந்திய சமூகத்தினரின் பாசமும் உற்சாகமும், இந்தியாவிற்கும் ஓமனிற்கும் இடையிலான மக்கள் உறவுகளை பிரதிபலிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இந்தியா- ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பிரதமர் மோடி முன்னிலையில் இன்று (டிச. 18) கையெழுத்தாக உள்ளது. ஜவுளி, காலணி, ஆட்டோ மொபைல், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் புதிய வேலைவாய்ப்புகளை புதிய ஒப்பந்தங்கள் மூலம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
