மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் சாடியோ கமாராவை (Sadio Camara) குறிவைத்து நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் அவர் உயிரிழந்தார். தலைநகர் பமாகோவுக்கு அருகிலுள்ள ‘காட்டி’ (Kati) நகரில் அமைந்துள்ள அமைச்சரின் இல்லத்தின் மீது, தற்கொலைப்படை தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரைச் செலுத்தி இந்தத் தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் அமைச்சர் சாடியோ கமாரா மட்டுமின்றி, அவரது இரண்டாவது மனைவியும் கொல்லப்பட்டதாக அவர்களது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். அமைச்சரின் இல்லத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகவும், அதில் காயமடைந்த அமைச்சர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதல் வெறும் அமைச்சரின் இல்லத்துடன் மட்டும் நின்றுவிடாமல், மாலி நாடு முழுவதும் ஒரு ஒருங்கிணைந்த பயங்கரவாதத் தாக்குதலாக உருவெடுத்துள்ளது. தலைநகர் பமாகோ உட்பட செவரே, கிடால் மற்றும் காவ் போன்ற முக்கிய நகரங்களிலும் ஒரே நேரத்தில் தீவிரவாதக் குழுக்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஜிஹாதிப் போராளிகள் மற்றும் வடக்கு பிரிவினைவாதக் கிளர்ச்சியாளர்கள் இணைந்து நடத்திய இந்தத் தாக்குதல்களில் 16-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நாட்டின் மிக உயரிய பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவரான அமைச்சரே கொல்லப்பட்டிருப்பது, அங்கு தற்போது ஆட்சியில் இருக்கும் ராணுவக் குழுவிற்குப் பெரும் சவாலாகவும் பாதுகாப்பு நெருக்கடியாகவும் மாறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மாலி முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிடல் மற்றும் காட்டி உள்ளிட்ட பகுதிகளில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதக் குழுக்களை வேட்டையாட அந்நாட்டு ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது. பல இடங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், முக்கிய சாலைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு ரோந்துப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் இறையாண்மையைக் காக்க ராணுவம் உறுதிபூண்டுள்ளதாகவும், சந்தேகத்திற்கிடமான நபர்களைப் பற்றி பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் மாலி ஆயுதப் படைகளின் தலைமைப் பிரிவு அறிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version