உலக நாடுகளுடனான வர்த்தகத்தில் அதிரடி மாற்றத்தைப் புகுத்தும் வகையில், அமெரிக்கா தற்போது 10% உலகளாவிய வரியை (Global Tariff) உடனடியாக அமலுக்குக் கொண்டு வந்துள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் அளித்த விளக்கத்தில், புதிய சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கும் வரை இந்த 10% வரி நடைமுறையிலேயே இருக்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, இந்தியா இந்த வரியிலிருந்து தப்பிக்குமா என்ற கேள்விக்கு, “நிச்சயமாக இந்தியாவும் இந்த 10% வரியைச் செலுத்த வேண்டிய நாடுகளின் பட்டியலில் உள்ளது” என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதற்கு முன்பு ‘சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின்’ (IEEPA) கீழ் விதிக்கப்பட்ட வரிகளுக்குப் பதிலாக, இனி இந்த 10% வரி நடைமுறையில் இருக்கும் என்று தெரிகிறது. மேலும், அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் அனைத்து நாடுகளும் ஏற்கனவே உள்ள வர்த்தக ஒப்பந்தங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இந்தத் திடீர் வரி உயர்வு இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் உலகச் சந்தையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ANI இன் படி, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் 6-3 என்ற பெரும்பான்மைத் தீர்ப்பு, ட்ரம்ப் நிர்வாகத்திற்குப் பலத்த அடியைக் கொடுத்துள்ளது. 1977-ஆம் ஆண்டின் IEEPA சட்டத்தைப் பயன்படுத்தி விரிவான இறக்குமதி வரிகளை விதிக்க அதிபருக்கு நேரடி அதிகாரம் இல்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. அரசியலமைப்பின் படி, வரி விதிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திடம் மட்டுமே உள்ளது என்று தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ஜஸ்டிஸ் சாமுவேல் அலிட்டோ, கிளாரன்ஸ் தாமஸ் மற்றும் பிரட் கவனாக் ஆகியோர் ட்ரம்ப் அரசுக்கு ஆதரவாக நின்ற போதிலும், பெரும்பான்மை நீதிபதிகள் அதற்கு எதிராகத் தீர்ப்பளித்தனர். இந்த முடிவால், இதுவரை வசூலிக்கப்பட்ட பில்லியன் கணக்கான டாலர் வரிகள் செல்லாததாகிவிட்டன. இதனால் அமெரிக்க அரசு சுமார் 130 முதல் 175 பில்லியன் டாலர் வரையிலான தொகையை ரீஃபண்ட் செய்ய வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கை உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை “அதிர்ச்சியளிக்கக்கூடியது மற்றும் கேலிக்கூத்தானது என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “IEEPA சட்டத்தின் கீழ் என்னால் ஒரு டாலர் கூட வரியாகப் பெற முடியாது என்று நீதிமன்றம் கூறுகிறது. ஆனால், அதே சட்டத்தைப் பயன்படுத்தி என்னால் ஒரு நாட்டின் வர்த்தகத்தையே முடக்க முடியும், ஒட்டுமொத்த வர்த்தக அமைப்பையும் முடிவுக்குக் கொண்டு வர முடியும். அப்படி இருக்கும்போது, ஒரு டாலர் வரி விதிக்க மட்டும் எனக்கு அதிகாரம் இல்லை என்பது எவ்வளவு முட்டாள்தனமானது?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்தத் தீர்ப்பின் பின்னணியில் வெளிநாட்டுச் சக்திகளின் தலையீடு இருப்பதாகக் குற்றம் சாட்டிய ட்ரம்ப், அமெரிக்காவைச் சுரண்டி வரும் நாடுகள் இந்தத் தீர்ப்பால் மகிழ்ச்சியடையலாம், ஆனால் அவர்களின் அந்த மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்காது என்றும் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு மாற்று சட்ட வழியைக் கண்டுபிடித்துள்ளார். 1974-ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 122-ன் (Section 122 of the Trade Act of 1974) கீழ், 10% உலகளாவிய வரியை விதிப்பதற்கான புதிய அரசாணையில் தான் கையெழுத்திடப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையைச் (Balance-of-payments deficits) சரிசெய்ய, இந்தச் சட்டப்பிரிவின் கீழ் 150 நாட்களுக்கு 15% வரை தற்காலிக வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் உள்ளது. இதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ட்ரம்ப், இந்த 10% வரி விதிப்பை உறுதி செய்துள்ளார். அதேசமயம், தேசிய பாதுகாப்பு (Section 232) மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்காக (Section 301) ஏற்கனவே அமலில் இருக்கும் வரிகள் எந்த மாற்றமும் இன்றி அப்படியே தொடரும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட 18% வரிச் சலுகை, புதிய சட்ட நடைமுறைகளின்படி தொடர்ந்து பராமரிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த அறிவிப்பு இந்தியாவுக்கு முழுமையான நிம்மதியைத் தரவில்லை. ஏனெனில், ஏற்கனவே உள்ள வரிகளுடன் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 10% உலகளாவிய வரி (Global Tariff) கூடுதலாக இணைக்கப்பட உள்ளது.

இந்த புதிய வரி விதிப்பு முறையால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கியப் பொருட்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக, எஃகு (Steel) மற்றும் அலுமினியம்: கட்டுமானத் துறை சார்ந்த இந்த ஏற்றுமதிகள் பெரும் சரிவைச் சந்திக்கலாம். வாகன உதிரிபாகங்கள் (Auto Parts): இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு இது கூடுதல் செலவை ஏற்படுத்தும். ஜவுளித் துறை (Textiles): ஏற்கனவே கடும் போட்டியில் இருக்கும் இந்தியத் துணி ஏற்றுமதிக்கு இந்த 10% கூடுதல் வரி பெரும் சுமையாக மாறும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version