கர்நாடகாவின் மேகதாது அணைத் திட்டத்திற்கு காங்கிரஸ் ஒருபோதும் அனுமதி அளிக்காது என்றும், தமிழக நலனில் எந்த சமரசமும் இருக்காது என்றும் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மேகதாது அணை விவகாரத்தில் ஒரு செங்கல் கூட வைக்க விடமாட்டோம். இதுவரை சட்டமன்ற தீர்மானத்துக்கு ஆதரவு அளித்துள்ளோம்; இனியும் தமிழக மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்போம்” என்றார்.
கர்நாடகாவில் மாநில நலன் தொடர்பான பிரச்சினைகளில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுவதைப் போல, தமிழகத்திலும் அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், இந்த விவகாரத்தில் பிரதமர் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என்றும், அதற்காக தமிழக பாஜக மத்திய அரசிடம் மாநிலத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தவெக கட்சியில் ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் இணைந்து வருவதால், அந்தக் கட்சிக்கு “வாஷிங் மெஷின்” தேவைப்படுகிறது என கனிமொழி தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளித்த மாணிக்கம் தாகூர், “அவர் தனது கட்சி நிகழ்ச்சியில் திரும்பிப் பார்த்தாலே உடன் இருப்பவர்கள் யார் என்பது தெரியும். அவர்களது கட்சிக்கும் வாஷிங் மெஷின் தேவைப்படும்” என்று பதிலடி கொடுத்தார்.
மேலும், தன்னை கட்சி மாற பணம் கொடுத்து அணுகியதாக எம்.எல்.ஏ. ஒருவர் புகார் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும், அந்த புகார் குறித்து காவல்துறை முழுமையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
