கடந்த 1993-ஆம் ஆண்டு திமுகவில் நடந்த சம்பவங்கள் குறித்து விரிவாக விளக்கமளித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, 2006-ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததும், 2017-ல் திமுகவுடன் கூட்டணி சேர்ந்ததும் தனது அரசியல் வாழ்க்கையின் “இரண்டு பெருந்தவறுகள்” என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், 1993 ஏப்ரல் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நாகர்கோவில், தூத்துக்குடி பொதுக்கூட்டங்களில் நடந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்துள்ளார். நாகர்கோவில் பொதுக்கூட்டத்திற்கு முன்பு, தனது புகைப்படத்துடன் அதிக அளவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதாக தகவல் கிடைத்ததால், அவற்றை உடனடியாக அகற்றுமாறு தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டதாக கூறினார். இருப்பினும், இதனால் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி வருத்தமடைந்ததாகவும், பின்னர் கட்சித் தலைவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி பொதுக்கூட்டத்தில், “என் மார்பை பிளந்து பார்த்தால் அதில் கலைஞர்தான் இருப்பார்” என்று தனது விசுவாசத்தை வெளிப்படுத்திப் பேசியதாகவும், அதன்பிறகும் கருணாநிதியின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படவில்லை என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
மேலும், 2009-ஆம் ஆண்டு முரசொலியில் கருணாநிதி எழுதிய கவிதையில், தன்னைப் பற்றிய நிகழ்வுகள் உண்மைக்கு மாறாக சித்தரிக்கப்பட்டதாக குற்றம்சாட்டி உள்ளார். அந்தக் கவிதையில் இடம்பெற்ற உரையாடல்கள் நடந்ததே இல்லை என்றும், தன்னை களங்கப்படுத்தும் நோக்கில் கற்பனை சம்பவங்கள் உருவாக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 2026 ஜூலை 11-ஆம் தேதி அதே விவகாரம் மீண்டும் முரசொலியில் வெளியிடப்பட்டிருப்பது திட்டமிட்ட அரசியல் நடவடிக்கையா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளார்.
அதேநேரத்தில், கூட்டணி அரசியல் தொடர்பாகவும் தனது சுயவிமர்சனத்தை பதிவு செய்துள்ள வைகோ, “2006-ல் மதிமுக நிர்வாகிகளின் வற்புறுத்தலால் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது என் வாழ்க்கையின் முதல் பெருந்தவறு. அதேபோல், 2017-ல் பாஜகவை எதிர்க்கும் நோக்கில் திமுகவுடன் கூட்டணி சேர்ந்தது இரண்டாவது பெருந்தவறு” என்று தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக வலியுறுத்தியதாகவும், கூட்டணியில் இருந்ததால் திமுக அரசை விமர்சிக்க முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது மதிமுக சரியான அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும், “பொதிகை மலைபோல் உறுதியாக நிற்கிறோம். இனி எவராலும் நமக்கு கேடு செய்ய முடியாது. பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுந்து தமிழக அரசியலில் வலிமையாக பயணிக்கிறோம்” என்று வைகோ தனது அறிக்கையில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
