அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவு மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தந்தை ராமதாஸ் – மகன் அன்புமணி இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இரு தரப்பிலும் பாமக பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், அன்புமணி அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ராமதாசால் நியமிக்கப்பட்ட மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கடந்த 2022-ம் ஆண்டு கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 28-ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டதாகவும்,
புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு கடந்த மே மாதம் 30ம் தேதியில் இருந்து அவர் தலைவராக செயல்பட்டு வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில தலைவரின் பதவிக்காலம் முடிவடைந்தால் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மற்றும் கட்சி நிர்வாக பொறுப்பு உள்ளிட்டவை கட்சியின் நிறுவனருக்கே உள்ளது என கடந்த ஜூலை ஏழாம் தேதி நடைபெற்ற மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் நிறுவனருக்கே அதிகாரம் உள்ள நிலையில், செயல் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், குழப்பம் விளைவிக்கும் வகையிலும் செயல்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னைத்தானே தலைவர் என கூறிக்கொண்டு அன்புமணி செயல்படுவதாகவும், கட்சி தலைவரும், நிறுவனருமான ராமதாசின் அனுமதியில்லாமல் அன்புமணி 100 நாள் நடைப்பயணத்தை மேற்கொண்டு வருவதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பொதுக்குழு கூட்டம் வரும் ஒன்பதாம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் என உள்நோக்கத்துடன் அன்புமணி அறிவித்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ள முரளிசங்கர் தரப்பினர், அன்புமணியின் இந்த அறிவிப்பால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எனவே, அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.