அரசு முறை பயணமாக ஜெர்மனி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு அந்நிய முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க உள்ளதாகவும், புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஜெர்மனி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள தொழிலதிபர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். அப்போது தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”வேர்களை மறக்காத ஜெர்மனி நாட்டுத் தமிழ் உறவுகள் அடைந்துள்ள உயரம் கண்டு உள்ளம் பூரித்தேன். அவர்கள் அளித்த வரவேற்பின் ஆரவாரத்தில் அகம் குளிர்ந்தேன்.
தமிழ்நாட்டுக்கு வாருங்கள், நமது திராவிட மாஅல் அரசு அமைத்து வரும் தமிழர் தொன்மையின் பண்பாட்டுச் சின்னங்களைக் காணுங்கள்! உங்கள் சகோதரன்தான் முதலமைச்சராக இருக்கிறான் என்ற உரிமையோடும் நம்பிக்கையோடும் வந்து முதலீடு செய்யுங்கள், முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள்!” என குறிப்பிட்டுள்ளார்.