மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த கர்நாடகா, மற்ற மாநிலங்களின் அனுமதி பெற வேண்டும் என்று 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை என மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலுக்கு, அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் இந்த பதில் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். காவிரி நதிநீர் தமிழ்நாட்டின் 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், டெல்டா மாவட்ட விவசாயத்தின் உயிர்நாடியாகவும் விளங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவிரி நதிநீர் தொடர்பாக நீண்டகால சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதித் தீர்ப்பை வழங்கியதாகவும், அதனைத் தொடர்ந்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழுத்தத்தால் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு கர்நாடகா, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை உரிய நேரத்தில் வழங்காததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதுடன், பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பன்மாநில நதிகள் தேசிய சொத்து என்றும், எந்த மாநிலமும் தனி உரிமை கோர முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, ஆற்றின் மேல்பகுதியில் உள்ள மாநிலங்கள், கீழ்ப்பகுதியில் உள்ள மாநிலங்களுக்கு திட்டமிட்டபடி நீர் விநியோகம் செய்யப்படுவதை பாதிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதை எடப்பாடி பழனிசாமி நினைவூட்டியுள்ளார்.
மேலும் நாடாளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் அளித்த பதில், காவிரி நீரை நம்பி வாழும் மாநில மக்களிடையே தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
