“உயர் நீதிமன்ற தீர்ப்பு ஒரு தவறான முன்னுதாரணம். இதுபோன்ற தவறான தீர்ப்புக்குப் பிறகுதான் மணிப்பூரிலும் கலவரங்கள் வெடித்தன. திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்ற பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் முயற்சிக்கின்றன” என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்தார்.
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியது: “திருப்பரங்குன்றத்தில் பல நூற்றாண்டுகளாக எந்தப் பிரச்சினையும் இல்லாமல் மக்கள் கோயிலுக்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதேநேரத்தில் சிக்கந்தர் தர்காவுக்கும் சென்று வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாக மக்களிடையே மத குரோதத்தை உருவாக்கக் கூடிய விதமாக தேவையில்லாமல் சிலர் பிரச்சினைகளை உருவாக்குகின்றனர்.
மக்களுக்கு செய்ய வேண்டிய அத்தனை கடமைகளையும் தமிழ்நாடு அரசு சரியாக செய்து கொண்டிருக்கிறது. கார்த்திகை தீபம் தொடர்ந்து ஏற்றப்படுகிறது. கோயில் நிர்வாகமும் அறநிலையத் துறையும் சேர்ந்து கார்த்திகை தீபத்தை மலைமீது இருக்கும் பிள்ளையார் கோயிலில் ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு முன் வழக்கமாக மலை அடிவாரத்தில் இருக்கும் கோயிலில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். கோயில் மலைமீது கட்டப்பட்ட பிறகு அங்கு அந்த தீபம் ஏற்றப்படுகிறது.
ஆனால் திடீரென்று எந்த மதத்துக்கும் சம்பந்தமே இல்லாத ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட நில அளவைக்கல் (சர்வே ஸ்டோன்) மீது தீபத்தை ஏற்ற வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைக்கப்படுகிறது.
இந்து மதத்துக்கு எதிராக இந்து மக்களின் மனநிலையை புண்படுத்தும் வகையில் கோயிலுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு கல்லில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பிரச்சினைகளை உருவாக்குகின்றனர்.
ஏற்கெனவே இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பு வழங்கிவிட்டது. இப்போது நீதிபதி சுவாமிநாதன் தேவையில்லாமல் தலையிட்டு அரசை மீறி ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறார். தமிழ்நாடு காவல் துறையைத் தாண்டி, மத்திய காவல் படையைத் தீபம் ஏற்றுவோருக்கு துணையாக அனுப்பி வைக்கிறார்.
இதை பயன்படுத்திக் கொண்டு பாஜக மத கலவரத்தை உருவாக்க நினைத்தது. பாஜகவை சேர்ந்தவர்கள் இதை இன்னொரு அயோத்தியாக மாற்றிவிட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. அவர்களே இதை ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பதிவு செய்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சினையை எழுப்பியபோது, அமைச்சர் கிரண் ரிஜிஜு மூத்த உறுப்பினர் டி.ஆர்.பாலுவைப் பார்த்து, “நீங்கள் பேசுவது உங்களுக்கும் நல்லதல்ல உங்கள் கட்சிக்கும் நல்லதல்ல” என்று மிரட்டக்கூடிய வகையில் எச்சரிக்கை விடுக்கிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
