மதுரை மற்றும் கோவையின் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள பதிவில், ‘கோயில் நகர்’ மதுரைக்கும், ‘தென்னிந்திய மான்செஸ்டர்’ கோவைக்கும் “NO METRO” என மத்திய பாஜக அரசு நிராகரித்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார்.
அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு என்று சுட்டிக்காட்டி உள்ளார். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறியதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதேபோல மதுரை மற்றும் கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
