பல்மருத்துவர்களின் எதிர்காலத்தை திமுக அரசு பாழாக்குவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

பல் மருத்துவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் திமுக அரசு! பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய பல் மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம், அறிவாலயம் அரசின் அலங்கோல ஆட்சிக்கான மற்றொரு சான்று.

விடியா அரசிடம் இருந்து தங்களின் வாழ்வாதாரத்தைக் காத்துக்கொள்ள, தூய்மைப் பணியாளர்கள் முதல் அரசு மருத்துவர்கள் வரை அனைவரும் தெருவில் இறங்கிப் போர்க்கொடி பிடிக்கத் துவங்கிவிட்டனர். நாடு போற்றும் நல்லாட்சி எனத் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் அறிவாலயத்தின் ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கே இந்த நிலை எனில், அரசு வேலையை நம்பி பல கனவுகளோடு காத்திருக்கும் தமிழக இளைஞர்களின் நிலை அந்தோ பரிதாபம் தான்!

பல லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு, தற்காலிக அரசு ஊழியர்களுக்குப் பணி நிரந்தரம், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பலன் என வாய்க்கு வந்த வாக்குறுதிகளை வாரி இறைத்து ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த நான்கரை ஆண்டுகளாக ஊழல் செய்வதிலும், ஊற்றிக் கொடுப்பதிலும், விளம்பர விழாக்களிலும் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருப்பது வெட்கக்கேடு.

அவரவர் பிள்ளைகளுக்கு ஆட்சி அதிகாரம், அமைச்சர் பதவிகள் கிடைப்பதில் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்ட திமுக தலைவர்கள், தங்களை நம்பி வாக்களித்த தமிழகப் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கைகழுவி விட்டுவிட்டது அப்பட்டமான நம்பிக்கை துரோகம்.

போன தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளையே காப்பாற்றும் நேர்மையற்றவர்கள், “தேர்தல் அறிக்கை” என்ற பெயரில் அடுத்த தேர்தலுக்கான பொய் பட்டியலைத் தயாரிப்பதற்கு ஒரு குழுவை வேறு அமைத்துள்ளார்களாம்! எல்லாம் காலக் கொடுமை!

இவ்வாறு அந்தப் பதிவில் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version