தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாடு வருகிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளன. திமுக தரப்பில் மாவட்ட நிர்வாகிகளை முதலமைச்சரும் திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்துக்கு நேரில் வரவழைத்து கருத்துக் கேட்பு நடத்துவது, காணொளி வாயிலாக மாவட்டச் செயலாளர்களுடன் கலந்துரையாடல், திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி மண்டல மாநாடு, திருப்பூரில் மகளிரணி மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி வார்டு பொறுப்பாளர்கள் கூட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் அதிமுக தரப்பில் அக்கட்சியில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் மாநிலம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். மேலும் மாவட்டச் செயலாளர்களை வரவழைத்து எம்.ஜி.ஆர். மாளிகையில் நேரில் சந்தித்து கலந்தாய்வு நடத்தியுள்ளார்.
பாமகவில் அன்புமணியும், பாஜகவில் நயினார் நாகேந்திரனும் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியை அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் அன்புமணியின்பாமக, டிடிவி தினகரனின் அமமுக, ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி, ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பூவை ஜெகன்மூர்த்தியின் புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் இன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று பேசுகிறார். கேரளாவில் இருந்து மதியம் 1.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் பிரதமர் மோடி அங்கிருந்து மதியம் 2.15 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் செல்கிறார். பொதுக்கூட்டம் நடைபெறும் மேடையில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசும், பிரதமர் மோடி, மாலை 3.10 மணிக்கு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். பின்னர்,.15 மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வந்து பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் மோடி உரைநிகழ்த்தும் பொதுக்கூட்டத்தில் 2 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரதமர் வருகையையொட்டி 7 அடுக்கு பாதுகாப்புடன் மாவட்டம் முழுவதும் 15,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று டிரோன்கள் பறக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
