கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்தநாளில் காங்கிரஸ் கட்சி சார்பில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள பதிவில், கலைஞரின் பிறந்தநாளில் எனது மனமார்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறேன் எனக் கூறியுள்ளார்.
தமிழகத்தின் அன்பிற்குரிய தலைவரான அவர், சமூக நீதி, சமத்துவம், பகுத்தறிவு மற்றும் ஜனநாயக விழுமியங்கள் மீது கொண்டிருந்த வாழ்நாள் அர்ப்பணிப்பு, எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை மறுமலர்ச்சி அடையச் செய்ததாகவும்,
கலை, இலக்கியம் உள்ளிட்ட பொதுவாழ்விற்கு கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு, என்றும் ஆழமான மரியாதையுடன் நினைவுகூரப்படும் எனவும் தெரிவித்துள்ளர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள பதிவில், ‘கலைஞர்’ மு.கருணாநிதி அவர்கள் தமிழ் மக்களின் கண்ணியத்திற்காகவும், சமூக நீதிக்காகம், விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துப் போராடியவர் எனத் தெரிவித்துள்ளார்.
அவர் வெறும் முதலமைச்சர் மட்டுமல்ல – ஒரு எழுத்தாளர், கவிஞர் மற்றும் சிந்தனையாளர். ஒவ்வொரு இந்தியரையும் சமமாக நடத்தும் அரசியலமைப்பின் மீது அவர் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். அவரது பிறந்தநாளில் எனது பணிவான அஞ்சலியைச் செலுத்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு. செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள பதிவில், தமிழர் பெருமை, சமூக நீதி, மொழி உரிமை, தொலைநோக்கு பார்வை மற்றும் மாநில சுயாட்சிக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த தினமான இன்று அவருக்கு தங்களது புகழஞ்சலியை செலுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். கலைஞரின் எழுத்துப் பணியும், சிந்தனைகளும், மக்கள் நலப் பணிகளும் என்றும் நமது தலைமுறைகளை வழிநடத்தும் என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
