தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள எஸ்.பி.வேலுமணி, தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெக தரப்பில் நிற்கத் தயாரா என அதிமுகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர் எனக் குறிப்பிட்டு கோவையில் வாட்ஸ் அப் குரூப்களில் நியாயமா வேலுமணி தலைப்பிட்டு செய்தி ஒன்று உலா வந்து கொண்டிருக்கிறது.

அதில், இரண்டு வருடத்திற்கு முன்பே அதிமுகவில் ஒரு ஏக்நாத் ஷிண்டே என உங்களை சொன்னார்கள். அது இன்று ஊர்ஜிதமாக்கியிருக்கிறது.

எடப்பாடி அமைச்சரவையில் நான்கரை ஆண்டுகள் அடித்தது போதாதா. உங்களை சம்பாதிக்கவிட்ட எடப்பாடி, கட்சியையும் கட்சியினருக்கும் செலவு செய்யுங்கள் என சொல்லி, உங்கள் துறையில் தலையிட்டாரா?

இன்று எடப்பாடியை தூக்கி எறியும் நீங்கள், நாளை சிவி சண்முகத்தையும் தூக்கி எறிய மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

கோவை என் கோட்டை என சொன்னீர்களே. அந்த கோட்டையில் ஓட்டைப் போட்டு, தவெக 6 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது.

இவர்கள் பின்னால் நீங்கள் நிற்பீர்களா அல்லது அவர்கள் உங்கள் பின்னால் நிற்க வேண்டுமா? எதற்காக இந்த பதவி வெறி வேலுமணி?

20 வருடத்துக்கு முன்பு கட்சிக்கு வந்த நீங்கள், எம்.ஜிஆர் அம்மா காலத்து அரசியல்வாதியான எடப்பாடியாரை அழிக்க முயற்சி செய்யலாமா?

உங்கள் வரலாறு கட்சிக்கும் தெரியும். மக்களுக்கும் தெரியும். புதிதாக வந்த தவெகவுக்கு தெரியாது.

அப்படி உத்தமராக நீங்கள் இருந்தால், உங்களை நம்பி, எடப்பாடியாரை எதிர்த்து உங்கள் பின்னால் வந்த எம்.எல்.ஏ க்களுக்கு தவெக அமைச்சரவையிக் நீங்களும், சண்முகமும் இடம் வாங்கி கொடுங்கள்.

நத்தம் விஸ்வநாதன், காமராஜ், இரண்டு விஜயபாஸ்கர்கள், நீங்கள், சண்முகம் உங்களுக்கு மட்டும்தான் அமைச்சரவையில் இடம் என்றால், உங்களை நம்பி வந்தவர்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

இதுவா அரசியல். வெட்கப்பட்டு உங்கள் பதவிகளை இந்நேரம் ராஜினாமா செய்து இருக்க வேண்டும்.

ஊழலற்ற ஆட்சியை விரும்பும் முதல்வர் விஜய், உங்களை அமைச்சரவையில் நிச்சயம் சேர்த்துக் கொள்ள மாட்டார். அப்படியே சேர்த்தாலும், டிரையலில் இருக்கும் ஊழல் வழக்குகள் உங்கள் பதவியை காலி செய்துவிடும். தொகுதிவாசிகள் உங்கள் மீது வழக்கு தொடுப்பார்கள்.

72-ல் எம்.ஜி.ஆர் எதற்கு கட்சியை ஆரம்பித்தார். புரட்சித்தலைவி அம்மா எதற்காக திமுகவை எதிர்த்தார்.

குடும்பம், அடிபொடிகள், பினாமிகள், வழக்குகள், இதற்காகவா தவெகவை ஆதரித்து, அமைச்சரவையில் இடம் பெற துடிக்கிறீர்கள்..

இதற்கு உங்கள் பதவியை ராஜினாமா செய்து, தவெக சார்பில் நில்லுங்கள்.அப்போது தெரியும் மக்கள் சக்தி என்னவென்று. உங்களால் தவெகவுக்கும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். இதுதான் தொகுதியில் இன்று உங்களின் நிலை..

எனக்குப் பின்னாலும் நூறாண்டுகள் இந்த இயக்கம் இருக்கும் என சொன்ன அம்மாவின் வழியில், இந்த இயக்கம் நூறாண்டுகள் நிச்சயம் இருக்கும்.

ஆனால் இந்த இயக்கத்தில் நீங்கள் இருக்கமாட்டீர்கள். துரோகிகளும் இருக்க மாட்டார்கள்.

எடப்பாடியார் தலைமையில் இந்த இயக்கம் மீண்டும் வலுப்பெறும். காத்திருங்கள் வேலுமணி… என அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version