கோடநாட்டில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தேடிய கோப்புகளை கிழித்துவிட்டதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமமுக-வின் சென்னையைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம், கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் சென்னை அடையாரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது:
அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்பது பற்றி பழனிசாமிக்கு கவலை இல்லை. அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரோடு தான் இருக்க வேண்டும் என்று செயல்படுகிறார். இந்தத் தேர்தலில் பழனிசாமி என்ற துரோக சக்தி உறுதியாக வீழ்த்தப்படும். அவரை வீழ்த்திய பிறகு எம்ஜிஆர் உருவாக்கிய சட்ட விதிகளோடு அதிமுக மறுமலர்ச்சி பெறுவதற்கு அமமுக முனைப்போடு செயல்படும்.
இன்றைய திமுக கூட்டணி பலமாக இருப்பதற்கு காரணமே பழனிசாமியின் அடாவடி நடவடிக்கைகள் தான். திமுக 2021-ல் ஆட்சிக்கு வருவதற்கும், 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றி பெறவும் காரணமாக இருந்தவர் பழனிசாமி. அதிமுக-வுக்கு எதிராக அமமுக தொடங்கப்படவில்லை. பழனிசாமி எனும் துரோக சக்திக்கு எதிராக தொடங்கப்பட்டது.
நான் 1986-ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுடன் நிழலாக இருந்து பணியாற்றியவன். எனக்கு பல விஷயங்கள் தெரியும். ஜெயலலிதா ஆட்சி காலத்தில், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் தொடர்பாக உளவுத்துறையில் இருந்து வரும் கோப்புகள் போயஸ் கார்டனுக்கு வரும். சசிகலா சொன்னதின் பேரில் அதைபடித்துப் பார்த்து சிரித்துவிட்டு நானும் டாக்டர் வெங்கடேஷும் கிழித்துப் போட்டுஇருக்கிறோம். அதில் பல வண்டவாளங்கள் இருக்கும். அதை வைத்து யாரையும் பயமுறுத்த வேண்டும் என்ற கேவலமான எண்ணங்கள் என்னிடம் இல்லை.
அந்தக் கோப்புகள் கோடநாட்டில் இருக்கும் என்று யாரோ பொய்யான தகவலை தெரிவித்துள்ளனர். கோடநாடு கொலை யார் ஆட்சியில் நடக்கிறது… அப்போது சசிகலா ஜெயிலில் இருக்கிறார். என்னை கட்சியை விட்டு நீக்கிவிட்டனர். இதனால் அவர்களுக்கு பயம் அதிகமாகி இருக்கிறது. அதன் பிறகு நம் விவரங்களை தினகரன் வெளியில் விட்டுவிடலாம் என்று அஞ்சி இந்த செயலில் ஈடுபட்டனர்.
அவை எல்லாம் போயஸ் கார்டனில் தான் இருந்தது என்பதும், அதை எப்போதோ கிழித்துப் போட்டுவிட்டோம் என்பதும் அவர்களுக்குத் தெரியாது. இது தெரியாமல் பழனிசாமி கோடநாட்டில் போய் கோப்புகளை தேடிக் கொண்டிருக்கிறார். என்றைக்குமே டிடிவி தினகரன் பழனிசாமிக்கு சிம்ம சொப்பனம் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
