கோயம்பேடு சந்திப்பில் மேம்பாலம் கட்ட மத்திய அரசு சுமார் 160 பேரிடம் இருந்து நிலம் எடுக்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டது. அந்த பட்டியலில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் மனைவி பிரேமலதா பெயரும் இருந்தது. அந்த இடம் தான் ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் அமைந்திருந்த இடம்.
இந்த அறிவிப்பால் மண்டபத்திற்கு அபாயம் ஏற்படும் நிலை உருவானது. விஜயகாந்துக்கு இது மிகுந்த மனஅழுத்தம் கொடுத்தது, ஏனெனில் அந்த மண்டபம் அவருக்கு மிக முக்கியமானது. 2005-ல், விஜயகாந்த் திமுக அரசை எதிர்த்து பேசிக்கொண்டிருந்த நேரத்தில், மேம்பாலம் திட்டத்துக்கான நிலம் பெற்றுக்கொள்ள மண்டபம் இடிக்கப்படுவதில் அரசியல் நோக்கம் இருக்கிறதா என்ற சந்தேகமும் எழுந்தது. ஏன்னென்றால் அப்போது மத்திய அமைச்சராக இருந்தவர் திமுகவை சேர்ந்தவர் டி.ஆர். பாலு.
மண்டபத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில், விஜயகாந்த் 2005 மே 5-ஆம் தேதி நேரடியாக திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். இயக்குநர் ராம நாராயணனும் அவருடன் இருந்தார். சந்திப்புக்குப் பிறகு, காரணம் வெளிப்படையாக சொல்லப்படவில்லை. ஆனால், அவர் நடிக்கவிருக்கும் ‘சுதேசி’ படக்கதை கூற வந்ததாக ராம் நாராயணன் விளக்கம் அளித்தார். இதே நேரத்தில் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு சில கோப்புகளுடன் கருணாநிதியை சந்தித்தது மீடியாவில தெரிவிக்கப்பட்டது.
தேசிய முற்போக்கு திராவிட கழக அத்தியாயம் தொடக்கம்:
விஜயகாந்த் மேம்பாலம் திட்டத்தில் இருந்து மண்டபத்தை விலக்கிக் கொள்ள ஏற்கெனவே மாற்றுத்திட்டம் ஒன்றைச் சமர்ப்பித்திருந்தார். ஆனால் MMDA அதை நிராகரித்தது. பின்னர், பத்திரிகைகளில் “விஜயகாந்த் மண்டபத்தை இடிக்கவோ, மாற்றுவதற்கோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை” என்பதுபோல செய்திகள் வெளியானது. இந்த செய்தியை கேட்டு விஜயகாந்த் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் கருணாநிதி – விஜயகாந்த் சந்திப்பு விவரம் மீடியாவில் கசிந்தது. இதனால் விஜயகாந்த் மன வேதனையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, அவர் அரசியலுக்குள் அடியெடுத்து வைக்க காரணமாக இருந்தது. இதனை தொடர்ந்து 2005 செப்டம்பர் மாதம், மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை (தேமுதிக) ஆரம்பித்து, அரசியல் அரங்கில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கினார்.
கட்சி அலுவலகமாக, ஆண்டாள் அழகர்மண்டபத்தின் ஒரு பகுதியை பயன்படுத்தினார். இது அரசியல் ரீதியாக பாதுகாப்பானது என்ற தந்திரக் கணக்கில் உருவான முடிவாக இருந்தது. கட்சி தொடங்கிய சில நாள்களிலேயே, மண்டபம் தொடர்பான கடிதம் விஜயகாந்துக்கு வந்தது. “160 பேருக்கான ஒரு சட்டம், விஜயகாந்துக்கு வேறு சட்டமா?” என்று மத்திய அரசு மறைமுகமாகக் கூறியது. இதனை தொடர்ந்து மண்டப சர்ச்சை உச்சகட்டத்தில் இருந்தது.
ஆண்டாள் அழகர் மண்டபத்துக்கு ஆபத்து:

அப்போது திடீர்னு விஜயகாந்துக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டை வந்தது. அதைப் பிரிச்சுப் பார்த்ததும் விஜயகாந்துக்கு ஆச்சர்யம். அதுக்கு காரணம் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு. இதுவரைக்கும் வாழ்த்து அனுப்பாதவர் திடீர் என்று வாழ்த்து அனுப்பியது விஜயகாந்துக்கு பயங்கர அதிர்ச்சி.

புத்தாண்டு வாழ்த்து அட்டையைப் பிரிச்சுப் படிச்சுட்டு, பின்பக்கம் திருப்பிப்பார்த்த போது அதில் ஒரு படம் இருந்துது. அது புதுசா கட்டப்போகின்ற கோயம்பேடு மேம்பாலத்தோட வரைபடம். கூடவே, கோயம்பேடு நெடுஞ்சாலையோட மேப்படமு ம் இருந்தது. அது ஆண்டாள் அழகர் மண்டபத்துக்கு வரப்போற ஆபத்தைச் சுட்டிக்காடுகின்ற மாதிரி இருந்தது.

இது மண்டபத்திற்கு அரசியல் மோதல் போக்கு வெளிப்படையாக தெரிந்தது. தொடர்ந்து, விஜயகாந்த் மாற்றுத் திட்டத்தை தயார் செய்து சென்னை பெருநகர் வளர்ச்சி குழுவிற்கு அளித்தார். ஆனால் திட்டத்தில் “பாரிமுனை–பாடி” பாதை இல்லாததால், மறுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் கைலாஷ் மண்டபம், பொழிச்சலூர் ஏர்போர்ட் திட்டம் போன்ற மாற்றுத்திட்ட உதாரணங்களையும் முன்வைத்து திமுக அரசை விமர்சித்தார். மண்டபத்தை காப்பாற்ற வழக்குத் தாக்கல் செய்த விஜயகாந்த், நீதிமன்றத்திலிருந்தும் எதிர்மறையான தீர்ப்பு பெற்றார். மத்திய அரசின் முடிவை தடுக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது.

விஜயகாந்த் அரசியலுக்கு வருவதை திமுக பயந்து, அவரது மண்டபத்தையும் கட்சி அலுவலகத்தையும் இடிக்க நினைக்கிறது என்றும், அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

மக்களுடன் விஜயகாந்த்:

தமிழ் திரைப்படங்களை தவிர்த்து வேற்று மொழிகளில் நடிக்கக் கூடாது என்ற பிடிவாதம், ஏழை மற்றும் உதவி கேட்டு வரும் மக்களுக்கு இல்லை என்று சொல்லாத மனம்; தன்னை சந்திக்க வரும் அனைவரும் உணவளித்து அனுப்புவது; இளம் இயக்குநர்களுக்கு, திரைப்பட கல்லூரியில் பயின்றவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பது; படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் சமமாக நடத்துவது என அவர் தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே மக்களுடன் இரண்டற கலந்துவிட்டார்.

தொடர்ந்து அவரின் அரசியல் வாழ்வில் அவர் எதிர்பார்த்த தொடக்கம் கிடைத்தாலும், அதன்பின் அவர் எதிர்பார்த்த வளர்ச்சி கிடைக்கவில்லை எனலாம். தேர்தல் அரசியலுக்கு வந்து, இருபெருந் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தன்னை அறிவித்துக்கொண்டு 2006 சட்டப்பேரவை தேர்தல் மற்றும் 2009 மக்களவை தேர்தலை தனித்து நின்று தேமுதிக சந்தித்தது.

இவற்றில், முறையே 8.4 மற்றும் 10 சதவீத வாக்குகளை தேமுதிக பெற்றது. இதற்கு அடிதளம் அவரின் ரசிகர் மன்ற பணிகளை சொல்லலாம். 2000ஆம் ஆண்டில் அவரது ரசிகர் மன்றத்திற்கு கொடி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், 2001ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அவரின் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் போட்டியிட்டு வெற்றியையும் பெற்றனர். அவர் தன்னை ஒரு மாற்று சக்தியாக இந்த இடத்தில் இருந்துதான் பார்க்க தொடங்கினார் எனலாம்.

முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் உச்சத்தில் இருந்த காலகட்டத்திலேயே அவர்களுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்திக் கொண்டார், விஜயகாந்த். இருப்பினும், அவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடன் நல்ல புரிதலில் இருந்தார்.

2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் திமுகவுடன் கூட்டணி சேராத விஜயகாந்த் அதிமுகவுடன் கூட்டு வைத்தார். தொடர்ந்து, 2014 மக்களவை தேர்தல், 2016 சட்டப்பேரவை தேர்தல் என கருணாநிதி இருக்கும் வரையிலும் விஜயகாந்த் வேறு வேறு கூட்டணிக்கு சென்றாலும் திமுக பக்கம் மட்டும் தலைவைத்து படுக்கவேயில்லை

2016இல் பழம் நழுவி பாலில் விழும் என விஜயகாந்த் திமுக உடன் கூட்டணியில் சேருவார் என கருணாநிதியின் எதிர்பார்ப்பு கடைசி வரை நிறைவேறவில்லை.  அதற்கு முக்கிய காரணம், அவரது உயிரினும் மேலாக பார்த்த அந்த ஆண்டாள் அழகர் மண்டபத்தை இடித்ததுதான். இதுகுறித்த சர்ச்சை பேச்சுகள் தொடர்ந்தாலும், அவருக்கும் கருணாநிதிக்கும் இருந்த நட்புறவையும் யாராலும் மறுக்க முடியாது. அது ஒருபுறம் இருக்க, அவர் உயிரினும் மேலாக பார்த்த அந்த இடத்திலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இத்தனை சவால்களுக்கு இடையே தொடங்கப்பட்ட கட்சியை இன்று திமுகவுடன் இணைத்திருக்கிறார் பிரேமலதா. எனவே இது நிர்வாகிகளின் விருப்பம்தானா என அரசியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்,

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version