தவெக தலைவர் விஜய் சுயமாக பேசவில்லை என்றும் இது ஒரு நேர்மையற்ற அரசியல் கருத்து என்றும் அவரது வீடியோ குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
உடனடியாக மத்திய அரசு ஏன் குழு அமைக்க வேண்டும், அண்ணாமலை ஏன் விஜய்க்கு ஆதரவாக பேச வேண்டும், விஜயை சங்பரிவார் அமைப்புகள் வழி நடத்துகின்றன இது அவருக்கு ஆபத்தாக தான் போய் முடியும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

பெங்களூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது..

மற்ற மாவட்டங்களில் நடக்கவில்லை என்றால் அந்த மாவட்டங்களும் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது. அந்த மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ளும் பொழுது அதிமுக ஆட்சியில் இருந்ததா? திமுகவில் ஆட்சியில் இருந்ததா? இந்த ஒப்பீடு தவறானது. மற்ற இடங்களில் பாதுகாப்பு தந்த அதே காவல்துறை தான் கரூரிலும் இருக்கிறது மற்ற மாவட்டங்களில் பரப்புரை செய்த பொழுது தமிழ்நாடு அரசு என்பது அவருக்கு ஒத்துழைக்கிறது என்றால் இங்கு ஒத்துழைக்க மறுத்தது யார் ? செந்தில் பாலாஜி அவர்களை மட்டுமே குற்றவாளி என சொல்ல விரும்புகிறாரா விஜய்? அப்படி என்றால் அவர் என்ன மாதிரியான குற்றத்தை செய்தார் ஆள்களை ஏவினாரா? கல் எறிந்தாரா? வன்முறையை தூண்டினாரா? அதனால் காவல் துறையினர் லத்தி சார்ஜ் நடந்து துப்பாக்கி சூடு நடத்தி உயிரிழப்பு ஏற்பட்டதா? இதுதான் அரசியல் நேர்மையற்ற கருத்து

கரூரில் நிகழ்ந்தது கூட்ட நெரிசலில் நிகழ்ந்த உயிரிழப்பு ஒரு ஸ்கொயர் மீட்டரில் நான்கு பேர் நிற்க வேண்டிய இடத்தில் 10 பேர் நிற்கிறார்கள் 10 மணி நேரமாக காத்திருக்கிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் அங்கிருந்து ஒவ்வொருத்தரும் தப்பிக்க முயற்சி செய்த பொழுது மற்றவர்கள் மீது ஏறி மிதித்து ஓடியதனால் ஏற்பட்ட உயிரிழப்பு என்பது 100% கண் கண்ட உண்மை அதில் ஒரு உள்நோக்கம் கற்பிப்பதும் திமுக அரசின் மீது பழி போடுவது மிக மிக ஆபத்தான அரசியல் இது விஜய்க்கு நல்லதல்ல.

இது அவர் சுயமாக சிந்தித்து கூறியது போல் தெரியவில்லை. அவருடன் இருப்பவர்கள் இப்படி பேச வேண்டும் என ஒத்திகை கொடுத்து பேச வைக்கிறார்கள். அவர் எப்போது சுயமாக சிந்திக்கிறாரோ அங்கு தான் நல்ல அரசியல் உருவாகும். விஜயுடன் இருப்பவர்கள் சங்பரிவார், பாஜக பாசறையில் வளர்ந்தவர்கள் பாஜகவின் சக்திகள் அவரை சுற்றி இருக்கிறார்கள். அவர்கள் கொடுப்பதால் அவர்கள் கூறும் அறிவுரையால் இப்படி பேசுகிறார். இப்படி பேசுவதற்கு என்ன தேவை ஏற்பட்டது யாராவது தூண்டிவிட்டு இதில் நடைபெற்றதா? இவர்கள் ஏன் உள்ளே நுழைகிறார்கள் மத்திய அரசு ஏன் உடனடியாக குழு அமைகிறது. அண்ணாமலை விஜய் மேல் தவறு இல்லை எனக் கூறுகிறார். அப்படி பொதுமக்கள் யாராவது கூறினார்களா ? இவர்களே ஒரு கருத்து உருவாக்கத்தை உருவாக்குகிறார்கள். இது விஜய்க்கு எதிராகத்தான் போய் முடியும்..

இவ்வாறு அவர் பேசினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version