தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை அடுத்த பாரபத்தியில் நடைபெற்றது. இதற்காக வரலாறு திரும்புகிறது என்ற தலைப்பில் பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆகியோரது உருவப்படங்களுடன் விஜய் நிற்பது போன்று மாநாட்டு மேடை வடிவமைக்கப்பட்டிருந்தது. மாநாட்டை முன்னிட்டு சிறப்பு மாநாட்டு பாடல் வெளியிடப்பட்டது. ‘பெரியாரின் பேரன்’ என்ற பின்னணி வரிகள் முழங்க பாடல் ஒலித்தது.பிற்பகல் 3 மணியளவில் மாநாட்டு திடலுக்கு விஜய் வருகை தந்தார்.
மாநாட்டு மேடையில் வைக்கப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களின் புகைப்படத்துக்கு விஜய் மலர் தூவிமரியாதை செலுத்தினார். தொடர்ந்து மேடைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள கம்பத்தில் தவெக கட்சிக் கொடியை விஜய் ஏற்றினார்.
பின்னர் மேடைக்கு வந்த விஜய், தொண்டர்களுக்கு கை காட்டியபடி ராம்ப் வாக்கில் நடந்து வந்தார். அப்போது தொண்டர்கள் சிலர் ராம்ப் வாக்கில் தடுப்புகளை தாண்டி ஏறி ஓடி வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் பவுன்சர்கள் திணறினர். தொண்டர்கள் வீசிய துண்டுகளை வாங்கிய விஜய் தனது கழுத்தில் போட்டுக்கொண்டார். விஜயுடன் சில தொண்டர்கள் செல்ஃபியும் எடுத்தனர். கட்சி நிர்வாகிகள் பேசிய நிலையில், தவெக தலைவர் விஜய் சிறப்புரை ஆற்றினார்.
“” சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியில் வரும். வேடிக்கை பார்க்க சிங்கம் வெளியே வராது. காட்டில் பல விலங்குகள் இருக்கலாம். சிங்கம் கர்ஜித்தால் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு அதிரும்.
மதுரை மண்ணில் வாழும் மக்கள் உணர்வுப்பூர்வமானவர்கள். சினிமாவிலும், அரசியலிலும் நமக்கு பிடித்தவர் எம்ஜிஆர். அவருடன் பழகுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவரைப் போலவே குணம் கொண்ட என்னுடைய அண்ணன் விஜயகாந்துடன் பழகுவதற்கு எனக்கு நிறைய வாய்ப்பு கிடைத்தது. அவரும் இந்த மதுரை மண்ணைச் சேர்ந்தவர்தான்.
நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொன்னார்கள், மாநாடு நடத்த மாட்டேன் என்றார்கள்; இப்போ பாருங்க, நான் ஆட்சியை பிடிக்க மாட்டேன் என்கிறார்கள். தமிழக அரசியலையே மாற்றும் மாநாடு இது, நாங்கள் எதிரிகள் சொல்லும் எதையும் காதில் போட்டுக்கொள்ள மாட்டோம். எல்லா கூக்குரலையும் சிரிப்போடு கடந்து வந்துள்ளோம். யாராலும் தடுத்து நிறுத்த முடியாத குரல் இது. இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கான வேட்டாகவும் மாறும். ஆட்சியை பிடித்துக் காட்டட்டுமா?
பாசிச பாஜகவுடன் மறைமுக கூட்டுக்கு செல்ல நாம் என்ன ஊழல் கட்சியா? மோடியின் முரட்டுப் பிடிவாதத்தால் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. பொய் வாக்குறுதிகள் கொடுத்து திமுக எல்லோரையும் ஏமாற்றுகிறது.
234 தொகுதிகளிலும் உங்கள் வீடுகளில் உள்ளவர்கள்தான் வேட்பாளர்களாக நிற்பார்கள். தமிழ்நாடு முழுக்க நானே வேட்பாளர் என நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும். உங்கள் விஜய்தான் இந்த கட்சியின் சின்னம். தமிழ் மக்கள் யாவரும் என் ரத்த உறவுகள். அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலனுடன் வந்துள்ளேன்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குழந்தைகளின் தாய்மாமன் நான். தமிழக மக்கள் எனக்கு கடவுள் கொடுத்த வரம். மக்களை மதிக்கிறேன். மக்களை வழிபடுகிறேன். உங்களுக்காக உண்மையாக உழைக்க உங்கள் விஜய் வந்திருக்கிறேன். வாழ்நாள் முழுக்க மக்களுடன் இருப்பேன். நல்லது செய்ய மட்டுமே வந்திருக்கிறேன். மக்களுக்கு பணி செய்து கிடப்பதே என் கடன். “”
இவ்வாறு விஜய் பேசினார்.