சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்-ஐ இன்று நேரில் சந்தித்து மனு வழங்கிய பின்னர், தமிழக வெற்றி கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த சில நாட்களாக பல்வேறு தேர்தல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து தமிழக வெற்றி கழகம் தேர்தல் அதிகாரியிடம் தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறோம். அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் தேர்தல் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்.
வரவிருக்கும் வாக்கு எண்ணிக்கையின்போது எந்தவிதமான குளறுபடிகளும் நடைபெறாமல் பாதுகாப்பான முறையில் செயல்முறை நடைபெற வேண்டும் என்பதையும் கேட்டுக் கொண்டதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக வாக்கு எண்ணிக்கையின் போது திமுக சார்பில் சில குளறுபடிகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், அதனால் எந்தத் தவறும் நடைபெறாத வகையில் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக கூறினார்.
மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய தபால் வாக்குகள் தொடர்பாக கடுமையான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், தபால் வாக்குகளை எண்ணும் செயல்முறை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.வாக்கு எண்ணும் மையங்களில் தேவையில்லாத தகராறுகள் ஏற்படும் சூழ்நிலையை உருவாக்க சிலர் முயற்சி செய்கிறார்கள் என்ற தகவலும் எங்களிடம் உள்ளது. அதனால் அத்தகைய பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை (CRPF) கொண்டு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளதாகவும் நிர்மல் குமார் தெரிவித்தார்.அதேபோல், தபால் வாக்குகள் அனைத்தும் முறையாக ஸ்கேன் செய்யப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும் என்றும், இறுதி இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவதற்கு முன்பே தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்ததாக கூறினார். இதற்கான தேவையான அறிவுறுத்தல்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
மொத்தத்தில், வாக்கு எண்ணிக்கையின் போது எந்தவிதமான குழப்பங்களும், தாக்கங்களும் ஏற்படாமல் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் என்பதற்காக தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு வழங்கியதாகவும், தேர்தல் ஆணையம் அதற்கான உறுதிமொழி அளித்துள்ளதாகவும் நிர்மல் குமார் தெரிவித்தார்.
