ஆணவக் கொலைக்கு எதிராக விஜய் குரல் கொடுக்காதது ஏன் என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளர்.
தொடர் ஆணவ படுகொலைகளை கண்டித்து பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை அக்கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையேற்று நடத்தினார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர்,
”ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்றிட வேண்டும். மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் ஆணவ கொலை வழக்கை சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதோடு, அவரது தம்பிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
ஆணவ கொலைகள் தடுப்பு சட்டத்தை தேசிய அளவில் மத்திய அரசு இயற்றிட வேண்டும். இந்த ஆணவ படுகொலைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, இந்த படுகொலைகளை செய்யக்கூடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 40 ஆண்டுகளாக விடுதலை சிறுத்தைகள் கட்சி போராடுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான இந்த ஆணவ படுகொலைகள் நடக்கிறபோது பெரிய கட்சிகளும், புதிய கட்சிகளும் வாய் திறப்பதில்லை.
நடிகர் விஜய்யால் இந்த ஆணவ படுகொலையை கண்டிக்கக்கூட முடியவில்லை. தி.மு.க. அரசை கடுமையாக விமர்சிக்கிற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் இந்த ஆணவ படுகொலையை கண்டிக்க முடியவில்லை. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் வாக்குகள் மட்டும் அ.தி.மு.க.விற்கு வேண்டும். ஆனால் அவர்களுக்காக அ.தி.மு.க. பேசுவதில்லை. இன்றைக்கு இந்த ஆணவ படுகொலையை விவாதிக்ககூடிய அளவுக்கு சூழ்நிலையை விடுதலை சிறுத்தைகள் கட்சி தான் உருவாக்கி உள்ளது. ஆணவ கொலைகள் காலம் காலமாக இருக்கிறது.
கவினை ஆணவ படுகொலை செய்ததை சிலர் நியாயப்படுத்தி பேசுகிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது அபாண்டமான பலியை சுமத்துகிறார்கள். அவதூறு பரப்புகிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்தபோது பா.ஜனதா போன்ற தேசிய கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. அண்ணா, கருணாநிதி ஆகியோரின் துணிச்சல் ஆணவ கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்றிட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வர வேண்டும் என்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
இந்த சட்டத்தை முதல்-அமைச்சர் கொண்டு வந்தால் இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக பரிணாமம் பெற முடியும். பல மாநிலங்களுக்கு வழிகாட்டக்கூடிய முன்மாதிரி அரசை நீங்கள் நடத்துகிறீர்கள் என்று வரலாற்றில் பதிவாகும்” எனக் கூறியுள்ளார்.