டிஆர்எஸ்-ஸில் 100% தோல்வி!. LSG கேப்டன் பதவியிலிருந்து விலகினார் ரிஷப் பண்ட்!

சமீபத்தில் நிறைவடைந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாகச் செயல்பட்ட ரிஷப் பண்ட், டிஆர்எஸ் முடிவுகளை எடுப்பதில் மோசமான சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

இத்தொடரில் அவர் எடுத்த 9 டிஆர்எஸ் முடிவுகளும் முற்றிலும் தோல்வியில் முடிந்துள்ளன. ஃபீல்டிங்கின் போது 8 முறையும், பேட்டிங்கின் போது ஒரு முறையும் அவர் எடுத்த ரிவ்யூ முடிவுகள் அனைத்தும் அணிக்கு ஏமாற்றத்தையே தந்தன. கடந்த 2025 ஐபிஎல் சீசனிலும் அவர் எடுத்த 9 டிஆர்எஸ் முடிவுகளில் 8 தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சீசனில் லக்னோ அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்ததுடன், பண்ட்டின் பேட்டிங் ஃபார்மும் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. இதனால் கேப்டனாகவும் வீரராகவும் கடும் விமர்சனங்களைச் சந்தித்த ரிஷப் பண்ட்,  லக்னோ அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து  விலகினார். இதை லக்னோ நிர்வாகமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்தநிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கு முன்பாக, இந்திய அணியின் துணைக் கேப்டன் பதவியிலிருந்து ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டார். இந்த அதிரடி மாற்றம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

இந்நிலையில், துணைக் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர்,  ரிஷப் பண்ட்டிடம் தனியாக ஆலோசனை நடத்தியதாக அணியின் உதவி பயிற்சியாளர் ரையான் டென் டோஸ்கேட் (Ryan ten Doeschate) கூறினார்.

இதுகுறித்து டென் டோஸ்கேட் கூறுகையில், “இந்திய அணி போன்ற ஒரு உலகத்தரம் வாய்ந்த அணியில் தலைவனாகச் செயல்பட அதிகாரப்பூர்வ பதவி தேவையில்லை என்பதை ரிஷப் பண்ட் நன்றாகப் புரிந்து வைத்துள்ளார். ஒரு சீனியர் வீரராக அணியை எப்படி வழிநடத்த வேண்டும், களத்தில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்து கௌதம் கம்பீரும் பண்ட்டும் நேற்று நீண்ட நேரம் பேசினர். ரிஷப் பண்ட்டின் அசாத்தியமான ஆட்டத்திறனை நாங்கள் கட்டுப்படுத்த விரும்பவில்லை. ஆனால், சில நேரங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப தனது அதிரடி குணத்தைக் கட்டுப்படுத்தி, நிதானமாக விளையாட பழக வேண்டும் என கம்பீர் அறிவுறுத்தியுள்ளார்” என்றார்.

பதவி பறிக்கப்பட்டாலும் பண்ட் வழக்கம் போல் உற்சாகமாக இருப்பதாகக் குறிப்பிட்ட டென் டோஸ்கேட், “இந்த முடிவால் பண்ட் எந்தவொரு சுணக்கமும் அடையவில்லை. அவர் எப்போதும் போல அணியை உற்சாகமாக வைத்திருக்கும் அதே துடிப்புடன் தான் இருக்கிறார். அவரது நடத்தையில் எந்த மாற்றமும் தெரியவில்லை. அவர் மீண்டும் பேட்டிங் செய்வதைக் காண ஆவலோடு காத்திருக்கிறோம்” என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version