2026 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், பிசிசிஐ மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியம் தனது பண பலத்தால் ஒட்டுமொத்த கிரிக்கெட் விளையாட்டையே சீரழித்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்திய அணி உலகக்கோப்பையை வென்றிருந்தாலும் அல்லது தோற்றிருந்தாலும், கிரிக்கெட்டில் நிலவும் சமநிலையை பிசிசிஐ-யின் அதிகாரம் பாதிப்பதாக அவர் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

பாகிஸ்தானின் ‘கேம் ஆன் ஹை’ நிகழ்ச்சியில் பேசிய அக்தர் கூறுகையில், பிசிசிஐ-யின் வர்த்தக ரீதியான ஆதிக்கம் மற்ற நாடுகளின் கிரிக்கெட் வளர்ச்சியைப் பாதிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். அதிகப்படியான ஐபிஎல் போட்டிகள் மற்றும் வீரர்களுக்கு வழங்கப்படும் அதிக வருமானம் காரணமாக, சர்வதேச கிரிக்கெட்டின் தரம் குறைந்து வருவதாகவும் அவர் சாடியுள்ளார். “கிரிக்கெட் இப்போது ஒரு விளையாட்டாக இல்லாமல், வெறும் வியாபாரமாக மாறிவிட்டது” என்று அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதாவது “ஒரு தெருவில் இருக்கும் ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளை, அந்தப் பகுதியில் உள்ள ஏழைப் பிள்ளைகள் அனைவரையும் ஒன்றாக அழைத்து ‘வாருங்கள் கிரிக்கெட் விளையாடலாம்’ என்று சொல்வதைப் போலத்தான் இது இருக்கிறது. இந்தியா இப்போது நமக்கு அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது” என்று அவர் சாடியுள்ளார்.

ஐசிசி தொடர்களில் அணிகள் தேர்ந்தெடுக்கப்படும் முறையை விமர்சித்த அவர், “எட்டு அணிகளில் அவர்கள் நான்கு அணிகளைத் தங்கள் பிடியில் வைத்துக் கொள்கிறார்கள். அந்த நான்கில் இருந்து மூன்று அணிகளை மீண்டும் அழைத்துவிட்டு, தாங்கள் மட்டும் முன்னேறிச் செல்கிறார்கள். இறுதியில் ‘பார், நான் ஜெயித்துவிட்டேன்’ என்று சொல்கிறார்கள். இப்படிச் செய்வதன் மூலம் அவர்கள் ஒட்டுமொத்த கிரிக்கெட் விளையாட்டையே சீரழித்துவிட்டார்கள்” என்று அவர் கோபமாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வெற்றிக்குப் பின்னால் உள்ள உழைப்பைத் தாண்டி, பிசிசிஐ-யின் மேலாதிக்கம் குறித்து அக்தர் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ரசிகர்கள் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கிரிக்கெட் உலகில் நிலவும் அதிகாரப் போட்டி மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அக்தரின் இந்த ‘நேரடித் தாக்குதல்’ கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version