19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதனிடையே நேற்று 20வது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை அணியும், ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி மோதியது. மும்பை மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த பெங்களூரு அணிக்கு பில் சால்ட் மற்றும் விராட் கோலி ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை குவித்தது.

இதனை தொடர்ந்து ஆடிய மும்பை அணிக்கு ரிக்கில்டன் 22 பந்துகளில் 37 ரன்கள், ரோகித் சர்மா 13 பந்துகளில் 19 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் 33 ரன்கள் குவித்தது. போட்டி முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 222 ரன்களை எடுத்தது. இதன் காரணமாக பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், எதிரணி பேட்டர்களின் சிம்மசொப்பனமாகவும் விளங்கும் ஜஸ்பிரித் பும்ராவின் தற்போதைய ஃபார்ம் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் துல்லியமான யார்க்கர்கள் மற்றும் அபாரமான பந்துவீச்சால் இந்திய அணிக்கு வெற்றிகளைத் தேடித்தந்த அவர், நடப்பு ஐபிஎல் தொடரில் திணறி வருவது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இந்த சீசனில் விளையாடிய 4 போட்டிகளில் மும்பை அணி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ள நிலையில், பும்ரா இதுவரை ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் விக்கெட் வறட்சியில் தவித்து வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வழக்கமாக டெத் ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்துவதோடு, இக்கட்டான சூழலில் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றும் வல்லமை கொண்டவர் பும்ரா. ஆனால், தற்போதைய போட்டிகளில் அவரது பந்துவீச்சை பேட்டர்கள் எளிதாக எதிர்கொள்வதும், ரன்கள் கசிவதும் மும்பை அணியின் பந்துவீச்சு பலத்தை பலவீனப்படுத்தியுள்ளது. பும்ரா போன்ற ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர், சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தனது பழைய வேகத்தோடும் ஆக்ரோஷத்தோடும் ஃபார்முக்கு திரும்புவார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றாலும், அந்தத் திருப்பம் அடுத்தடுத்த போட்டிகளில் எப்போது நிகழும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version