இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்ட்யா, தேசியக் கொடியை அவமதித்ததாகக் கூறி அவர் மீது புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை  இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மைதானத்தில் கொண்டாட்டங்கள் களைகட்டின. அப்போது ஹர்திக் பாண்ட்யா தேசியக் கொடியைத் தனது உடலில் சுற்றிக்கொண்டு, தனது காதலியுடன் நெருக்கமாக இருந்ததாக அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் செயல் தேசியச் சின்னங்களை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அந்த வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.

புகார்தாரர் தனது மனுவில், 1971-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின் (Prevention of Insults to National Honour Act, 1971) கீழ் அனைத்து இந்தியர்களும் தேசியக் கொடிக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டியது கட்டாயம் என்று சுட்டிக்காட்டியுள்ளார். தேசியக் கொடியை ஆடையாகவோ அல்லது உடல் அலங்காரப் பொருளாகவோ பயன்படுத்துவது சட்டப்படி தவறு என்றும், குறிப்பாக பொதுவெளியில் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்த போது கொடியைப் போர்த்தியிருந்தது கோடிக்கணக்கான இந்தியர்களின் தேசப்பற்றை புண்படுத்தும் செயல் என்றும் அவர் வாதிட்டுள்ளார்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஹர்திக் பாண்ட்யா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என புனே காவல்துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெற்றிக் கொண்டாட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு செய்த செயலா அல்லது திட்டமிட்ட அலட்சியமா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்த வழக்கறிஞர் வலியுறுத்தியுள்ளார். இதுவரை இந்த விவகாரம் குறித்து ஹர்திக் பாண்ட்யா தரப்பிலிருந்தோ அல்லது பிசிசிஐ   தரப்பிலிருந்தோ அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version