18-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று(25.05.2025) நடைபெற்ற போட்டியில் குஜராத்துக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 230 ரன்களை குவித்தது. 231 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த தொடரில் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி, 4-ல் மட்டுமே வெற்றி பெற்றது. இதன்மூலம் முதல்முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இடம்பெற்று தொடரை நிறைவு செய்தது. இத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே தோனி இந்த தொடரோடு ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து இன்றைய ஆட்டத்திற்கு பிறகு பேசிய அவர், ”இந்த சீசன் எங்களுக்கு சிறப்பானதாக அமையவில்லை. இன்று தான் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். ஓய்வு குறித்து முடிவு எடுக்க எந்த அவசரமும் இல்லை”.

”உடல் பிட்னஸ் என்பது மிகவும் முக்கியம். கிரிக்கெட் வீரர்கள் அவர்களின் ஆட்டத்திறனை வைத்து ஓய்வு முடிவு எடுக்க விரும்பினால், சிலர் 22 வயதில் கூட ஓய்வு பெற வேண்டி இருக்கும். தற்போதைக்கு ராஞ்சிக்கு செல்கிறேன். பைக் ரைடு செய்ய உள்ளேன். திரும்பி வருவேன் என்றும் சொல்ல மாட்டேன். திரும்பி வர மாட்டேன் என்றும் இப்போது சொல்ல மாட்டேன். நன்கு யோசித்து முடிவு எடுப்பேன்”.

”போட்டிகளில் இன்னும் நாங்கள் ரன் குவிக்க வேண்டும். அதில் சில ஓட்டைகள் உள்ளன. அதனை நிரப்ப வேண்டும். ருதுராஜ் கெய்க்வாட் அடுத்த சீசனில் சில விஷயங்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. கேப்டனாக செயல்பட பொருத்தமானவர். அவர் என்னை விட 25 வயது இளையவர். அதைப் பார்க்கும் போதுதான் நான் வயதானதை உணர்கிறேன், எனக் கூறினார்”.

”இதன்மூலம், தற்போதைக்கு அவர் ஓய்வை முடிவை எடுக்கவில்லை என்றே தெரிகிறது. தனக்குப் பிறகு இளம் வீரர்கள் தலைமையேற்று சென்னை அணியை சிறப்பாக வழிநடத்த வேண்டும் என்று தான் கேப்டன் பொறுப்பை கெயிக்வாட்டிடம் கொடுத்தார் தோனி. ஆனால், நடப்பு சீசனில் சென்னை அணிக்கு எதிர்பார்த்ததை போல அமையவில்லை. இதற்கு அணி முழுமையாக கட்டமைக்கப்படாததே காரணம் என்று கூறப்பட்டது. எனவே, தோனி அடுத்த சீசனில் விளையாடுவார் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்”.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version