சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் டேவிட் வார்னரை, அந்த அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் பிளாக் செய்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை டேவிட் வார்னர் மொபைலில் தேடியபோது, அவருக்கு ‘User Not Found’ மற்றும் ‘This Profile is Private’ என்ற வாசகங்கள் திரையில் காட்டியுள்ளன. பொதுவாக ஒரு கணக்கு பிளாக் செய்யப்பட்டால் மட்டுமே இதுபோன்று காட்டும் என்பதால், வார்னர் அதனை அப்படியே ஸ்கிரீன்ஷாட் எடுத்துத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். மேலும், ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, “அவர்கள் என்னை ஒருபோதும் அன்-பிளாக் செய்ய மாட்டார்கள்” என்றும் வார்னர் பதிலளித்துள்ளார்.
ஹைதராபாத் அணியின் முதுகெலும்பாகவும், மூன்று முறை ஆரஞ்சு தொப்பியை வென்று கொடுத்த ரன் மெஷினாகவும் திகழ்ந்த வார்னரை அணி நிர்வாகம் இப்படி நடத்துவதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கடந்த 2016-ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்குத் தனது சிறப்பான கேப்டன்சி மூலம் சாம்பியன் பட்டத்தைப் பெற்றுத் தந்த ஒரு கேப்டனை, சமூக வலைதளங்களில் பிளாக் செய்யும் அளவிற்கு நிர்வாகம் நடந்துகொள்வது மிகவும் மோசமான செயல் என ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கடந்த 2021 ஐபிஎல் தொடரின்போதே வார்னருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் கேப்டன் பொறுப்பில் இருந்தும், அணியில் இருந்தும் நீக்கப்பட்டார். அந்த கசப்பான சம்பவங்களின் தொடர்ச்சியாகவே இந்தச் சமூக வலைதளப் புறக்கணிப்பும் நீடித்து வருவதாகக் கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
