அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி, நீண்ட நாட்களாக உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தனது 68-வது வயதில் காலமானார்.
சமீபத்தில் நடைபெற்ற 2026 பிஃபா உலகக்கோப்பைத் தொடரின் போதே, தனது குடும்பம் ஒரு கடினமான காலகட்டத்தைக் கடந்து வருவதாக மெஸ்ஸி வெளிப்படுத்தியிருந்தார். குறிப்பாக, உலகக்கோப்பையில் அல்ஜீரியா அணிக்கு எதிரான போட்டியில் கோல் அடித்த பிறகு மெஸ்ஸி மைதானத்திலேயே கண்கலங்கி அழுதார். இது ரசிகர்களிடையே பெரும் கேள்விகளை எழுப்பியது.
போட்டிக்குப் பின் இதுகுறித்து விளக்கமளித்த மெஸ்ஸி, “நான் ஏன் அழுதேன்? அதற்கும் கால்பந்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நான் சில கடினமான நாட்களைக் கடந்து வருகிறேன்” என்று கூறியிருந்தார். அவரது இந்த வார்த்தைகள் அவரது தந்தையின் உடல்நலக்குறைவுடனேயே தொடர்புபடுத்தப்பட்டன.
ஜார்ஜ் மெஸ்ஸியின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவியபோது, மெஸ்ஸியின் குடும்பத்தினர் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தனர். அதில், “ஜார்ஜ் மெஸ்ஸி உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார். அவர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார், நன்றாக குணமடைந்து வருகிறார்” என்று தெரிவித்திருந்தனர்.
மேலும், தங்களின் தனிப்பட்ட குடும்ப விஷயம் குறித்து சமூகத்தில் பரவிய வதந்திகள், மரியாதையற்ற கருத்துக்கள் மற்றும் மக்களின் உணர்வற்ற தன்மை குறித்து குடும்பத்தினர் தங்களது அதிருப்தியையும் கவலையையும் அப்போது வெளிப்படுத்தியிருந்தனர்.
ஜார்ஜ் மெஸ்ஸியின் மறைவுச் செய்தியைத் தொடர்ந்து, லியோனல் மெஸ்ஸியின் சிறுவயது கால்பந்து கிளப்பான ‘நியூவெல்ஸ் ஓல்ட் பாய்ஸ்’ (Newell’s Old Boys) சமூக வலைத்தளங்களில் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது. மெஸ்ஸியின் கால்பந்து வாழ்க்கையை வடிவமைத்ததில் ஜார்ஜ் மெஸ்ஸிக்கு உள்ள மிகப்பெரிய பங்கை அந்த கிளப் நினைவுகூர்ந்துள்ளது.
கிளப் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “ரொசாரியோ நகரில் தனது 68 வயதில் காலமான ஜார்ஜ் மெஸ்ஸிக்கு ஆழ்ந்த வருத்தத்துடனும் துயரத்துடனும் விடைபெறுகிறோம். அவர் ஒரு சிறந்த தொழிலதிபர் மற்றும் அர்ஜென்டினா தேசிய அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஆவார்” என்று தெரிவித்துள்ளது.
ஜார்ஜ் மெஸ்ஸியின் மறைவு குறித்து மெஸ்ஸியின் குடும்பத்தினர் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
