ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்திய வீராங்கனைகளும் வீரர்களும் தொடர் பதக்கங்களை வென்று அசத்தி வருகின்றனர்.

குறிப்பாகக் குத்துச்சண்டைப் பிரிவில் இன்று ஒரே நாளில் 5 பேர் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கங்களை உறுதி செய்துள்ளனர். ஆடவருக்கான 90 கிலோவுக்கு அதிகமானோர் பிரிவில் இந்திய வீரர் நரேந்தர் பெர்வால் அபாரமாக விளையாடி அரையிறுதிக்குத் தகுதி பெற்றார். அவரைத் தவிர சாக்ஷி சவுத்ரி, அருந்ததி சவுத்ரி, சச்சின் சிவாச் மற்றும் அங்குஷ் ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். குத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறும் வீராங்கனைகளுக்குக் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் உறுதி என்பதால், இந்தப் பிரிவில் மட்டும் இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.

தற்போது வரை இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானு மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். பளுதூக்குதலில் மட்டும் இந்தியா 1 தங்கம், 5 வெள்ளி, 1 வெண்கலம் என 7 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது.

அதேபோல், அத்லெடிக்ஸ் மற்றும் பாரா அத்லெடிக்ஸ் பிரிவில் ஷர்மிலா தங்கம் வென்றதன் மூலம் 4 பதக்கங்களும், பாரா பவர்லிஃப்டிங்கில் 1 வெண்கலமும் கிடைத்துள்ளன. மேலும், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அனிமேஷ் குஜுரும், குண்டு எறிதலில் தஜிந்தர்பால் சிங் மற்றும் சமர்தீப் சிங்கும் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறி இந்தியாவிற்குப் பதக்க வாய்ப்பை அதிகரித்துள்ளனர். பதக்கப்பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், கனடா இரண்டாம் இடத்திலும் உள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version