ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது மோசமான ஆட்டத்தைத் தொடர்ந்து வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் படுதோல்வியைத் தழுவிய சிஎஸ்கே, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான தனது இரண்டாவது போட்டியிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இப்போட்டியில் 22 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் ஆட்டம் குறித்து முன்னாள் இந்திய வீரர் ஆர். அஸ்வின் தனது யூடியூப் சேனலில் காரசாரமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
போட்டிக்குப் பிந்தைய பேட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் கூறிய சில காரணங்களை அஸ்வின் மறுத்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “போட்டி முடிந்து ருதுராஜ் சொன்ன ஒரு கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆடுகளத்தில் பந்து நின்று வந்ததாக அவர் கூறினார், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மைதானத்தில் ஈரப்பதம் (Moisture) சிறிதும் இல்லை. ஒருவேளை ஆரம்பத்தில் கொஞ்சம் ஸ்விங் இருந்திருக்கலாம், அதை நான் மறுக்கவில்லை. கடந்த போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் ரிஸ்க் எடுத்து ருதுராஜ் ஆட்டமிழந்தார், அந்த எண்ணம் இன்னும் அவர் மனதில் ஓடிக்கொண்டிருக்கலாம். டி20 என்பது ரிஸ்க் எடுத்து விளையாடும் ஒரு ஆட்டம், இதில் பின்வாங்கக் கூடாது” என்று அஸ்வின் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து பஞ்சாப் அணியின் ஆதிக்கம் குறித்துப் பேசிய அஸ்வின், சிஎஸ்கே இன்னும் கூடுதலாக 25 ரன்கள் எடுத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். “சிஎஸ்கே 209 ரன்கள் எடுத்திருந்தாலும், பஞ்சாப் அணியின் பேட்டிங் பலத்தை அவர்கள் யோசிக்கவில்லை. பஞ்சாப் அணியில் ஸ்டோய்னிஸ் கடைசியாக களமிறங்கினார், மார்கோ யான்சன் போன்ற அதிரடி வீரர்கள் பேட்டிங் செய்யாமலேயே போட்டி முடிந்துவிட்டது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால், சிஎஸ்கே எப்படியும் 230 முதல் 235 ரன்களையாவது இலக்காக நிர்ணயித்திருக்க வேண்டும். பஞ்சாப் அணி 18.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது வியப்பளிக்கிறது” என்று அஸ்வின் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், அவர் ஆடிய காலத்தை குறிப்பிட்டு பேசிய அஸ்வின், சிஎஸ்கே அணியை பார்க்கும்போது எனக்கு மனது உண்மையிலேயே வலிக்கிறது. இது எப்பேர்பட்ட அணி தெரியுமா? எவ்வளவு புகழ் பெற்ற அணி தெரியுமா? நான் விளையாடிய காலத்தில் இந்த அணி எவ்வாறு செயல்பட்டது தெரியுமா? ஆனால் இப்போது எப்படி இருக்கிறது. இதை பார்க்கும் போது உண்மையிலேயே என்னால் தாங்க முடியவில்லை . சிஎஸ்கே அணி விளையாடும்போது பனிரெண்டாவது ஓவரிலேயே வீரர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டார்கள்.
சிஎஸ்கே அணி பந்துவீச்சிக் பலம் இல்லை. இதனால் பேட்ஸ்மேன் தான் கூடுதல் பொறுப்பு எடுத்துக் கொண்டு 242 மேல் குவிக்க முயற்சி செய்ய வேண்டும். இதே போன்று சிஎஸ்கே அணி ஏலத்தில் சரியாக செயல்படவில்லை . கார்த்திக் ஷர்மா, பிரசாந்த் வீர் போன்ற வீரர்களுக்கு 14 கோடி ரூபாய் என்பது அதிகம். ஆனால் மற்ற அணி வீரர்கள் எல்லாம் ஹர்ஷ் டுபே, கூப்பர் கோனோலி போன்ற வீரர்களை குறைந்த பணத்தில் ஏலத்தில் எடுத்திருக்கிறார்கள். ஆனால் சிஎஸ்கே அணி சம்பந்தமே இல்லாமல் இளம் வீரர்களுக்கு இவ்வளவு பணத்தை கொடுத்து இருக்கிறது. நான் இளம் வீரர்கள் மீது குற்றம் சாட்ட விரும்பவில்லை. ஆனால் பிரசாந்த் வீருக்கு ஷார்ட்பால் ஆட தெரியவில்லை.
அவர் எதிர்கொண்ட ஏழு பந்துகளிலும் ஷார்ட் பால் தான் அவருக்கு வீசப்பட்டிருக்கிறது. ஆனால் பிரவீஸ் மீண்டும் அணிக்குள் வந்தால் நிச்சயம் சிஎஸ்கே அணி பலமாக மாறும். அதில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. இன்னும் சிஎஸ்கே அணி டாப் 4 இடத்திற்கு செல்வார்கள் என நம்புகிறேன். பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரவீஸ் அணியில் விளையாடி வெற்றியை தேடித்தந்தால் இரண்டு புள்ளிகள் கிடைக்கும். இது சிஎஸ்கேவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கிறது என அஸ்வின் கூறியுள்ளார்.
