இந்திய கிரிக்கெட் வட்டாரத்தை அதிரவைக்கும் வகையில், ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய வீரர்களின் பரிமாற்றம் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்  அணிகளுக்கு இடையே இன்று அதிகாரப்பூர்வமாக நடந்துள்ளது. டெல்லி அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் மீண்டும் தனது பழைய அணியான டெல்லி கேபிடல்ஸ்க்கு திரும்பியுள்ளார். அதற்குப் பதிலாக டெல்லி அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் லக்னோ அணியில் இணைந்துள்ளார்.

கடந்த 2025 மெகா ஏலத்தில் ஐபிஎல் வரலாற்றிலேயே மிக அதிகபட்ச தொகையான ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்ட்டை லக்னோ அணி வாங்கியிருந்தது. ஆனால், லக்னோ அணியில் கடந்த இரண்டு சீசன்களாக (2025, 2026) பண்ட்டின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி எதிர்பார்த்த அளவு சிறப்பாக அமையவில்லை. மேலும், லக்னோ அணி பிளே-ஆஃப் சுற்றுக்கும் தகுதி பெறவில்லை. சமீபத்தில் மே 29 அன்று அவர் லக்னோ அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார்.

தற்போது டெல்லி அணிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்ததை அடுத்து, இந்த டிரேடிங் நடந்துள்ளது. டெல்லி அணிக்கு திரும்பியதன் மூலம் அவரது சம்பளம் ரூ.27 கோடியிலிருந்து ரூ.15 கோடியாகக் குறைந்துள்ளது. அதாவது ரூ.12 கோடி சம்பளக் குறைப்பை ஏற்றுக்கொண்டு அவர் டெல்லி அணிக்கு திரும்பியுள்ளார். டெல்லி அணிக்காக ஏற்கனவே 9 சீசன்களில் (2016-2024) விளையாடியுள்ள பண்ட், அந்த அணியின் அதிக ரன் குவித்த வீரர் (3284 ரன்கள்) என்ற பெருமையைப் பெற்றவர்.

மறுபுறம், டெல்லி அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ், அதே ரூ.13.50 கோடி ஒப்பந்தத் தொகையுடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணைந்துள்ளார். டெல்லி அணிக்காக 5 சீசன்களில் விளையாடி 72 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ள குல்தீப் யாதவுக்கு 2026 சீசன் சற்று சுமாராகவே அமைந்தது (12 போட்டிகளில் 10 விக்கெட்டுகள்). கொல்கத்தா, டெல்லி அணிகளைத் தொடர்ந்து குல்தீப் விளையாடப் போகும் 3-வது ஐபிஎல் அணி லக்னோ ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version