சஞ்சு சாம்சன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இந்திய அணியின் சக வீரரான அபிஷேக் ஷர்மா குறித்து ஒரு சுவாரசியமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில், மற்ற இந்திய வீரர்கள் அபிஷேக் மீது ஒருவித ‘பொறாமை’ கொண்டுள்ளனர் என்று கூறியுள்ளார்,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன், தனது சக தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மாவுடனான உறவு மற்றும் களத்தில் அவர்களது அதிரடி ஆட்டம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர்களது பார்ட்னர்ஷிப் மிகவும் சிரமமில்லாதது (Effortless) மற்றும் சமநிலையானது என்று குறிப்பிட்ட சாம்சன், இந்த கூட்டணியை “நெருப்பும் நெருப்பும்” (Fire and Fire) இணைந்தது போன்றது என வர்ணித்துள்ளார். களத்தில் இருவரும் மாறி மாறி அதிரடியைத் தொடங்கி, எதிரணியின் பந்துவீச்சைத் துவம்சம் செய்வதை இது குறிப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும், தங்களுக்குள் இருக்கும் இந்தச் சிறந்த புரிதலுக்குப் பின்னால் ஒரு ‘இயல்பான கேரளா – பஞ்சாப் நட்பு’ (Kerala-Punjabi friendship) இருப்பதாகவும் சஞ்சு சாம்சன் சுட்டிக்காட்டினார். அபிஷேக் ஷர்மாவின் துணிச்சலையும், இக்கட்டான சூழலிலும் அவர் காட்டும் நிதானத்தையும் தான் வியந்து பார்ப்பதாகக் கூறிய சாம்சன், மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவர்கள் பகிர்ந்து கொள்ளும் நட்புறவை மிகவும் ரசிப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், தங்களுக்குள் இருக்கும் மிக எளிமையான தகவல் பரிமாற்றம் குறித்து விளக்கிய சஞ்சு, “எல்லாம் எங்களுக்கு மிகவும் இயல்பாகவே நடக்கிறது, நாங்கள் எதையும் சிக்கலாக்கிக் கொள்வதில்லை. பந்து எப்படி வருகிறது என்று அவர் என்னிடம் கேட்பார்; பந்து சாதாரணமாகத்தான் வருகிறது, தூக்கி சிக்ஸருக்கு அடி என்று நான் அவரிடம் சொல்வேன். அவருடன் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதானது. அபிஷேக் மிகுந்த துணிச்சலும், நிதானமும் கொண்டவர். அவருடைய பண்பு எனக்கு மிகவும் பிடிக்கும்; மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவருடனான நட்பை நான் ரசிக்கிறேன்,” என்று தெரிவித்தார்.
இறுதியாக, அபிஷேக் ஷர்மா மிகக் குறுகிய காலத்திலேயே அடைந்த அபாரமான புகழைக் கண்டு, இந்திய அணியின் மற்ற வீரர்கள் அவர் மீது ஒருவித பொறாமை’ கொண்டிருந்தனர் என்ற ரகசியத்தையும் சஞ்சு சாம்சன் அந்தப் பேட்டியில் நகைச்சுவையுடன் வெளிப்படுத்தினார்.
அபிஷேக் ஷர்மாவிற்கு கிடைத்து வரும் அதீத வரவேற்பு குறித்துப் பேசிய சஞ்சு சாம்சன், “ஆரம்பத்தில், மைதானத்தில் அபிஷேக்கிற்கு கிடைக்கும் ஆரவாரத்தைப் பார்த்து மற்ற வீரர்கள் பொறாமைப்படுவார்கள். எங்கு பார்த்தாலும் ‘அபிஷேக், அபிஷேக்’ என்ற சத்தம் தான் கேட்கும். மக்கள் அவரை மட்டும்தான் பார்க்கிறார்களா என்று நாங்கள் வியந்ததுண்டு. ஆனால், இப்போது அவர் இந்த அணியின் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க பாய்,” என்று ஜாலியாகக் குறிப்பிட்டார்.
மேலும், சமீபத்தில் நடைபெற்ற ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஜோடி நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்தனர். தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கிய இந்த ஜோடி, பவர்பிளே ஓவர்களில் இந்திய அணிக்கு ஒரு பிரம்மாண்டமான தொடக்கத்தை அளித்தது. இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 98 ரன்களைக் குவித்தனர். இவர்களது இந்த அதிரடி ஆட்டத்தின் பலனாக, இந்திய அணி இறுதிப்போட்டியில் 255 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது குறிப்பிடத்தக்கது.
