19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், இன்று (மே 29) நடைபெற உள்ள இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதிச் சுற்றுப் (Qualifier 2) போட்டியில் குஜராத்- ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன.

பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகாரில் இன்றிரவு 7.30 மணிக்கு இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் முக்கியமான மோதலில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

முதலாவது தகுதிச் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் தோல்வியடைந்ததால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இறுதிப்போட்டிக்கு நுழைய முனைப்பு காட்டும். மறுபுறம், வெளியேற்றுதல் சுற்றில் (Eliminator) ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி உற்சாகத்துடன் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ், அதே வேகத்தைத் தொடர முயற்சிக்கும்.

இந்த சீசனில் இவ்விரு அணிகளும் இதுவரை இரண்டு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் தலா ஒரு வெற்றியை இரு அணிகளும் சமமாகப் பகிர்ந்து கொண்டுள்ளன. இதனால், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுபவர்களே இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்கள் என்பதால், ஆட்டம் மிகுந்த பரபரப்போடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, மே 31ம் தேதி அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில், ஏற்கனவே தகுதி பெற்றுள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மகுடத்திற்காகப் பலப்பரிட்சை நடத்த உள்ளது.

இந்தநிலையில், குஜராத்- ராஜஸ்தான் அணிகள் சமபலத்துடன் களமிறங்குவதால், இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்குக் குறைவிருக்காது என கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version