தென்அமெரிக்க நாடான கயானாவில், 179 பேருடன் சென்ற ‘எம்.வி. பாரிமா’ என்ற பயணிகள் கப்பல் நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் ஜார்ஜ்டவுனில் இருந்து போர்ட் கைடூமா நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்தக் கப்பல், கரைப்பகுதியில் இருந்து சுமார் 7 மைல் தொலைவில் சென்றபோது இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. நள்ளிரவில் கப்பலிலிருந்து வந்த அவசர அபாயச் சமிக்ஞையைத் தொடர்ந்து, மீட்புக்குழுவினர் உடனடியாக விரைந்து சென்றனர். எனினும், கடுமையான கடல் சீற்றம் மற்றும் இருள் சூழ்ந்த சூழல் காரணமாக ஆரம்பக் கட்ட மீட்புப் பணிகளில் பெரும் சவால்கள் ஏற்பட்டன.

தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில், இதுவரை 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், விபத்தில் சிக்கிய 69 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், 83-க்கும் மேற்பட்டோர் இன்னும் மாயமாகியுள்ளனர். மாயமானவர்களைத் தேடும் பணியில் நவீன ஸ்கேனர்கள், தனியார் படகுகள் மற்றும் அனுபவமிக்க மூழ்காளர்கள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிகாரப்பூர்வப் பயணப் பட்டியலில் இடம்பெறாதவர்களும் கப்பலில் பயணித்திருக்கலாம் என்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்துக்கான காரணம் குறித்துக் காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பெரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கப்பலின் கேப்டன் மற்றும் ஊழியர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியது மருத்துவப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. அவர்களின் கடுமையான அலட்சியமே பல உயிர்களைப் பறித்திற்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் கயானா நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version