ஐபிஎல் 2026 திருவிழா வரும் மார்ச் 28-ஆம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு விண்ணைத் தொட்டுள்ளது. நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, தனது கோட்டையான பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் முதல் போட்டியில் களமிறங்குகிறது. வழக்கமாக கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் மோதிய அணிகளே முதல் போட்டியில் மோதும் என்றாலும், இந்த முறை ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘RCB vs CSK’ மோதலை முதல் போட்டியாக நடத்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மெகா மோதல் குறித்த அதிகாரப்பூர்வ அட்டவணை நாளை, அதாவது மார்ச் 12-ஆம் தேதி (வியாழக்கிழமை) வெளியாகும் என்று பிசிசிஐ (BCCI) செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார். தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, முதற்கட்டமாக முதல் 20 நாட்களுக்கான அட்டவணை மட்டும் தற்போது வெளியிடப்பட உள்ளது. மீதமுள்ள போட்டிகளுக்கான தேதிகள் தேர்தல் தேதிகளுக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும்.
நடப்பு சாம்பியன் ஆர்சிபி மற்றும் ஐந்து முறை கோப்பை வென்ற சிஎஸ்கே அணிகள் மார்ச் 28-ஆம் தேதி மோதுவது உறுதியானால், அது ஐபிஎல் வரலாற்றிலேயே மிகப்பெரிய தொடக்கமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. தோனி மற்றும் விராட் கோலி ஆகிய இரு ஜாம்பவான்களையும் ஒரே களத்தில் காண ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.
