விஜய் ஹசாரே கிரிக்கெட் கோப்பை போட்டியில், 413 ரன்களை வெற்றிகரமாக சேஸிங் செய்து கர்நாடக அணி வெற்றி பெற்றுள்ளது.
குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளான ஜார்க்கண்ட், கர்நாடகா இடையேயான போட்டி, அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஜார்க்கண்ட் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 412 ரன்களை எடுத்தது.
அந்த அணி வீரர் இசான் கிஷன் 33 பந்துகளில் அதிரடியாக சதம் விளாசி, அதிவேக சதம் அடித்தோர் பட்டியலில் இணைந்தார். மொத்தம் 39 பந்துகளில் 125 ரன்களை எடுத்து அவர் ஆட்டமிழந்தார். இதில் 7 பவுண்டரிகள், 14 சிக்சர்களும் அடங்கும்.
பின்னர் 413 என்ற இமாலய இலக்கை வைத்து கர்நாடக அணி களமிறங்கியது. இமாலய இலக்கு என்பதால், கர்நாடக அணியால் சேசிங் செய்ய முடியாது என கருதப்பட்டது. ஆனால் அந்த அணி வீரர்கள் அதை தனது அதிரடி பேட்டிங்கால் பொய்யாக்கினர்.
மயங்க் அகர்வால் 54, தேவ்தத் படிக்கல் 147, அபினவ் மனோகர் 56, துருவ் பிரபாகர் 40 என அந்த அணி வீரர்கள் அதிரடி காட்டினர். இதனால் 47.3வது ஓவரிலேயே 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 413 ரன்களை எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
ஆட்டநாயகன் விருது, கர்நாடக அணியின் வெற்றிக்கு வித்திட்ட அந்த வீரர் தேவ்தத் படிக்கல்லுக்கு வழங்கப்பட்டது.
