வங்கதேச கிரிக்கெட் அணியின் அனுபவம் மிக்க விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ், அந்த அணியின் ஒருநாள் (ODI) கிரிக்கெட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ஏற்கனவே டி20 அணியின் கேப்டனாக இருந்த லிட்டன் தாஸ், தற்போது வங்கதேசத்தின் ஒயிட்-பால் (White-ball) கிரிக்கெட்டின் முழு நேர கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.
முன்னதாக ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்த மெஹிதி ஹசன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) அறிவித்துள்ளது. 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரை அவர் கேப்டனாக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2027 உலகக் கோப்பை போட்டி தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் அக்டோபர் 4 முதல் நவம்பர் 21 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் 14 அணிகள் பங்கேற்க உள்ளன.
31 வயதான லிட்டன் தாஸ், 2015-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன்பிறகு வங்கதேச அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இதுவரை 54 டெஸ்ட் போட்டிகளில் 3,356 ரன்கள் குவித்துள்ள அவர், 6 சதங்கள் மற்றும் 20 அரைசதங்கள் பதிவு செய்துள்ளார். 104 ஒருநாள் போட்டிகளில் 2,869 ரன்கள் எடுத்துள்ள லிட்டன், 5 சதங்கள் மற்றும் 14 அரைசதங்களைப் பெற்றுள்ளார். மேலும், 122 டி20 சர்வதேச போட்டிகளில் 2,702 ரன்கள் குவித்து 16 அரைசதங்கள் விளாசியுள்ளார்.
புதிய கேப்டனாக லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டிருப்பது, 2027 உலகக் கோப்பையை இலக்காகக் கொண்டு வங்கதேச அணி புதிய கட்டத்தை நோக்கி முன்னேறுவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் கருதுகின்றன.
