முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி 67 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாவே அணி அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.
பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாவே ஆகிய அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. ராவல்பிண்டியில் நடந்து வரும் போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். நேற்று (நவ. 20) நடந்த லீக் போட்டியில் இலங்கை மற்றும் ஜிம்பாவே அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாவே அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் பிரையன் பென்னட் 49 ரன்களும், கேப்டன் சிகந்தர் ராசா 47 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கிறது. ஆரம்பமே அந்த அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. இலங்கை அணி 29 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடர்ந்து வந்த வீரர்களும் ரன்கள் சேர்க்க திணறியதால், இலங்கை அணி 20 ஓவர்களில் 95 ரன்கள் மட்டுமே எடுத்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், ஜிம்பாவே அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இலங்கை அணியின் கேப்டன் ஷனகா 34 ரன்களும், ராஜபக்ச 11 ரன்களும் எடுத்ததை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.
20 ஓவர் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிராக ஜிம்பாவே பெற்ற மிகப் பெரிய வெற்றி இதுவாகும். நாளை (நவ. 22) நடைபெறும் லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன.
