விஜய் ஹசாரே கோப்பைத் தொடரில் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது.சர்பராஸ் கான், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சிவம் தூபே போன்ற பெரிய நட்சத்திர வீரர்களைக் கொண்ட மும்பை அணி, 217 ரன்கள் என்ற இலக்கை எட்டத் தவறியது.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற அபிஷேக் சர்மா தலைமையிலான பஞ்சாப் அணி 216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
மும்பை அணியின் இன்னிங்ஸை அங்கிரிஷ் ரகுவன்ஷி மற்றும் முஷீர் கான் ஆகியோர் தொடங்கினர். முஷீர் 21 ரன்களும், ரகுவன்ஷி 23 ரன்களும் எடுத்தனர். இதற்கிடையில், சர்பராஸ் கான் பஞ்சாப் பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்து, வெறும் 15 பந்துகளில் தனது அரை சதத்தை எட்டினார். இதன் மூலம், விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில் அதிவேகமாக அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை சர்பராஸ் படைத்தார். அவர் 20 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் எடுத்தார்.
கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முந்தைய போட்டியில் 82 ரன்கள் எடுத்த வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்த முறையும் அவர் நல்ல தொடக்கத்தைப் பெற்றார், ஆனால் 34 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதற்கிடையில், இந்தப் போட்டியில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் தூபே ஆகியோர் சொதப்பினர். சூர்யகுமார் 15 ரன்கள் எடுத்த நிலையில், தூபே வெறும் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஒரு கட்டத்தில் மும்பை 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்திருந்தது. இன்னும் 27 ஓவர்களுக்கும் மேலாக இருந்த நிலையில், வெற்றிக்காக மும்பைக்கு வெறும் 16 ரன்களே தேவைப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் அபாரமாக தாக்கினர்; அடுத்த 14 ரன்களுக்குள் மும்பை அணியின் பாதி வீரர்கள் வெளியேற்றப்பட்டனர். இதன் விளைவாக, மும்பை அணியின் இன்னிங்ஸ் 215 ரன்களிலேயே முடிவடைந்து, அந்த அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
