டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ரூ.131 கோடி பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.

அகமதாபாத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா தனது மூன்றாவது டி20 உலகக்கோப்பையைத் தக்கவைத்துக்கொண்டது. இந்த மகத்தான வெற்றியைப் பாராட்டும் விதமாக, பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சய்க்கியா இந்த மெகா பரிசுத்தொகையை இன்று (மார்ச் 10) அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த ரூ.131 கோடி பரிசுத்தொகையானது உலகக்கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி, தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உள்ளிட்ட பயிற்சியாளர்கள், உடற்பயிற்சி நிபுணர்கள் மற்றும் இதர துணை ஊழியர்களுக்குப் பிரித்து வழங்கப்பட உள்ளது. இதில் வீரர்களுக்குச் சமமான பங்கும், மற்ற ஊழியர்களுக்கு அவர்களது பணி நிலைக்கு ஏற்பவும் தொகைகள் ஒதுக்கப்படும். கடந்த 2024-ம் ஆண்டு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்றபோது வழங்கப்பட்ட ரூ.125 கோடியை விட, இம்முறை ரூ.6 கோடி கூடுதலாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, இந்தத் தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி, உலகக்கோப்பை வரலாற்றில் கோப்பையைத் தக்கவைத்த  முதல் அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இறுதிப்போட்டியில் சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டமும், ஜஸ்பிரித் பும்ராவின் துல்லியமான பந்துவீச்சும் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டன. வீரர்களின் இந்த அர்ப்பணிப்பைக் கௌரவிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் பரிசுத்தொகை, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் வழங்கப்பட்ட மிகப்பெரிய ஊக்கத்தொகையாகக் கருதப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version