தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, மத்திய ஆயுதப் படை வீரர்கள் இன்று சென்னை வந்தடைந்தனர். தேர்தல் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக முதற்கட்டமாக 50 கம்பெனி பாதுகாப்புப் படையினர் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் வருகை தந்தனர்.

பெரம்பூர் ரயில் நிலையத்தில் இன்று காலை வந்து இறங்கிய சுமார் 600 வீரர்களில், 5 கம்பெனிகளைச் சேர்ந்த 530 துணை ராணுவ வீரர்களும், சுமார் 70 சிஆர்பிஎப் (CRPF) வீரர்களும் அடங்குவர். இவர்களைத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் வரவேற்று, அவர்களுக்கான தங்குமிடங்கள் மற்றும் பாதுகாப்புப் பணிகளை ஒதுக்கீடு செய்தனர். தேர்தலின் போது அசம்பாவிதங்கள் நடைபெறுவதைத் தவிர்க்கவும், வாக்காளர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்யவும் இவர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

இந்த வீரர்களில் 2 கம்பெனி வீரர்கள் ஆவடிக்கும், 2 கம்பெனி வீரர்கள் தாம்பரத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள ஒரு கம்பெனி வீரர்கள் திருவள்ளூர் மற்றும் சென்னை மாநகரப் பாதுகாப்புப் பணிகளுக்காகப் பிரித்து அனுப்பப்பட்டனர். தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதன் பின்னர் மேலும் பல கம்பெனி வீரர்கள் தமிழகம் வர உள்ளனர். இவர்கள் அந்தந்த மாவட்டங்களில் பதற்றமான வாக்குச் சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version