கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், கைதான வடமாநிலத் தொழிலாளருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி பகுதியில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றிய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிபின் மஞ்சு என்பவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். அவரை வரும் 29-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
வடமாநில தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் வசிக்கும் பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. கும்மிடிப்பூண்டி பகுதியில் ஆயிரக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்.
ஆனால் அங்கு தங்கி இருக்கும் வடமாநில தொழிலாளர்கள் குறித்து முறையான ஆவணங்களோ, பட்டியலோ இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக தகவல்கள், ஆவணங்களை முறையாக வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களும், வேலைக்கு அழைத்து வரும் ஏஜெண்டுகளும் சேகரித்து வைத்து இருக்க வேண்டும் என்றும் அது போல சேகரித்து வைக்கவில்லை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளுர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
