தரமற்ற உணவு விநியோகம் செய்ததால் வாடிக்கையாளருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட வழக்கில், சொமாட்டோ (Swiggy) உணவு விநியோக செயலிக்கும், சம்பந்தப்பட்ட உணவகத்திற்கும் ரூ. 30,000 இழப்பீடு வழங்க சென்னை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெகபிரபு நாராயணசாமி என்பவர், வேளச்சேரியில் உள்ள அர்ஜூன் மம்மி டாடி ஆந்திரா மெஸ்ஸில் இருந்து சொமாட்டோ மூலம் அசைவ உணவு ஆர்டர் செய்துள்ளார். அந்த உணவை உட்கொண்ட பிறகு ஜெகபிரபுவுக்கு மூச்சுத்திணறல், தலைசுற்றல், நெஞ்சடைப்பு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. இரண்டு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய அவர், உடனடியாக உணவுத்துறை அதிகாரிகளிடம் புகாரளித்தார்.

ஜெகபிரபுவின் புகாரைத் தொடர்ந்து, அந்த உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில், உணவகம் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு, ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து, தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடாக ரூ. 2.50 லட்சம் வழங்கும்படி சொமாட்டோ மற்றும் அர்ஜூன் மம்மி டாடி ஆந்திரா மெஸ் மீது சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஜெகபிரபு வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம், சேவை குறைபாட்டுடன் செயல்பட்ட உணவகம் மற்றும் சொமாட்டோ இணைந்து பாதிக்கப்பட்ட ஜெகபிரபுவுக்கு ரூ. 25,000 இழப்பீடாகவும், வழக்கு செலவாக ரூ. 5,000 என மொத்தம் ரூ. 30,000 வழங்க உத்தரவிட்டது.

Share.
Leave A Reply

Exit mobile version